2014-03-13 15:50:05

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டதன் முதல் ஆண்டு நிறைவு நாளில் பல்வேறு ஆயர்கள் அவைகளிலிருந்து திருத்தந்தைக்கு வாழ்த்துக்கள்


மார்ச்,13,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் தலைமைப் பொறுப்பிற்குத் தெரிவு செய்யப்பட்டதன் முதல் ஆண்டு நிறைவு நாளான இவ்வியாழனன்று, "தயவுசெய்து எனக்காகச் செபியுங்கள்" என்ற குறுகியச் செய்தியைத் தன் Twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
திருத்தந்தையும், வத்திக்கான் உயர் அதிகாரிகளும் தங்கள் ஆண்டு தியானத்தை மேற்கொண்டிருந்தாலும், இந்த முதலாண்டு நிறைவையொட்டி பல்வேறு ஆயர்கள் அவைகளிலிருந்து திருத்தந்தைக்கு வாழ்த்துக்கள் வந்தவண்ணம் உள்ளன.
தன் முதல் ஆண்டு பணிநிறைவு நாளன்று தியானத்தில் ஈடுபட்டுள்ளத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு இத்தாலியத் தலத்திருஅவையின் நன்றிகள், செபத்தின் வழியாக வெளியிடப்படுகின்றன என்று இத்தாலிய ஆயர் பேரவையின் செய்தி கூறுகிறது.
தன் எளிமையான வார்த்தைகளாலும், வாழ்வாலும் திருத்தந்தை பிரான்சிஸ் கடந்த ஓராண்டளவாக கத்தோலிக்கர்களை மட்டுமல்லாமல், மத நம்பிக்கையற்ற நல்ல உள்ளத்தோர் அனைவரையும் கவந்துள்ளார் என்று அமெரிக்க ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Joseph Edward Kurtz அவர்கள் செய்தி அனுப்பியுள்ளார்.
இவ்வுலகின் அடிப்படை குடும்பங்கள் என்றும், அவற்றைக் கட்டியெழுப்புவதே திருஅவையைக் கட்டியெழுப்புவதன் முதல் பணி என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உணர்ந்திருப்பதால், அவர் குடும்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்று போலந்து ஆயர்கள் பேரவையின் தலைவர், பேராயர் Jòzef Michalik அவர்கள் தன் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி, கான்கிளேவ் சிறப்புக் கூட்டத்தில் கூடியிருந்த கர்தினால்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் தேர்ந்தெடுத்தபோது அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையை முழுமையாக நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை என்று போர்த்துகல் ஆயர் பேரவையின் தலைவர் José Manuel Macário அவர்கள் கூறியுள்ளார்.
புனித பிரான்சிஸ் அவர்களின் பெயரைத் தெரிவுசெய்துள்ள திருத்தந்தையின் முதல் ஆண்டு பணி நிறைவையொட்டி, இத்தாலியின் அசிசி நகரில் புனித பிரான்சிஸ் அவர்களின் கல்லறை அடங்கிய பசிலிக்காவில் மாலை 7 மணியளவில் சிறப்புச் செப வழிபாடு நடைபெறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.