2014-03-12 15:57:31

திருத்தந்தை நோயுற்றோரைச் சந்தித்த பரிவு, உலக சமுதாயத்தின் உள்ளத்தில் அழியாது பதிந்துள்ளது - அருள் பணியாளர் லொம்பார்தி


மார்ச்,12,2014. கத்தோலிக்க உலகத்தையும் தாண்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் கருத்துக்கள் உலக மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்வண்ணம் அமைந்துள்ளன என்பது திருத்தந்தையின் முதல் ஆண்டு நிறைவில் நம் கவனத்தைக் கவர்கிறது என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அருள் பணியாளர் பெதேரிகோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.
மார்ச் 13, இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்று ஓராண்டு நிறைவுறுவதையொட்டி, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் இயேசு சபை அருள் பணியாளர் லொம்பார்தி அவர்கள் இவ்வாறு கூறினார்.
கடந்த ஆண்டு மார்ச் 13ம் தேதி மாலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் மேல்மாடத்தில் முதன்முறையாக தோன்றியது, அதைத் தொடர்ந்து வந்த புனித வாரத்தில், அவர் இளம் கைதிகளின் காலடிகளைக் கழுவியது ஆகிய நினைவுகள் தன்னில் அதிகம் பதிந்தவை என்று அருள் பணியாளர் லொம்பார்தி அவர்கள் கூறினார்.
இத்தாலியின் லாம்பதுசா தீவுக்கும், பிரேசில் நாட்டின் ரியோ டி ஜனெய்ரோ நகருக்கும் திருத்தந்தை அவர்கள் மேற்கொண்ட பயணங்கள் உலகினரின் கவனத்தைப் பெருமளவில் கவர்ந்துள்ளன என்பதும் அவரது முதலாண்டின் முக்கிய நினைவுகள் என்று அருள் பணியாளர் லொம்பார்தி அவர்கள் எடுத்துரைத்தார்.
கடந்த ஓராண்டளவாய் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள புதன் மறையுரைகளும், அத்தருணங்களில் அவர் மக்களைச் சந்தித்த விதமும், குறிப்பாக, நோயுற்றோரைச் சந்தித்த பரிவும் உலக சமுதாயத்தின் உள்ளத்தில் அழியாத நினைவுகளாகப் பதிந்துள்ளன என்றும் அருள் பணியாளர் லொம்பார்தி அவர்கள் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மக்களின் மனங்களை நேரடியாகத் தொடுமாறு பேசுவதால், திருப்பீடத்தின் செய்தித் தொடர்பாளர் என்ற தன் பணி எளிதாக்கப்பட்டுள்ளது என்றும் அருள் பணியாளர் லொம்பார்தி அவர்கள் தன் பேட்டியில் மகிழ்வுடன் நினைவுகூர்ந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.