திருஅவை குடியேற்றதாரர்க்கு வழங்கும் ஆதரவுக்கு ஐ.நா. பாராட்டு
மார்ச்,11,2014. புலம்பெயர்ந்தோரைப் பாதுகாப்பாக கவனிப்பதில் கத்தோலிக்கத் திருஅவையின்
பங்கு மதிப்பிட முடியாதது என்று ஐ.நா. புலம்பெயர்ந்தோர் நிறுவனத் தலைவர் Antonio Guterres
பாராட்டினார். புலம்பெயர்ந்தோர் நலனில் அக்கறை காட்டி சேவை செய்துவரும் அமெரிக்க ஐக்கிய
நாட்டு ஆயர் பேரவையின் குடியேற்றதாரர் பணிக்குழுவுடன் கூட்டம் நடத்திய ஐ.நா. அதிகாரி
Guterres, மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் மோதல்கள் போன்ற சூழல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு
உதவுவதில் திருஅவையின் பங்கு குறிப்பிடும்படியானது என்று கூறினார். தற்போது மத்திய
ஆப்ரிக்கக் குடியரசில் இடம்பெறும் சண்டை கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையேயான
சண்டை என விளக்கப்பட்டாலும், பழிபாவங்களுக்கு அஞ்சாத அரசியல்கட்சிகளால் மதம் பயன்படுத்தப்படுகின்றது
என்றும் அவர் தெரிவித்தார். இந்தச் சூழல், மனிதாபிமான நிறுவனங்களுக்கு மிகுந்த நெருக்கடிகளைக்
கொடுத்து வருகிறது எனவும், போரிடும் குழுக்கள் தங்கள் பிரச்சாரத்துக்கு மதத்தைப் பயன்படுத்துகின்றன
எனவும் Guterres கூறினார். புலம்பெயர்ந்தோருக்கு வாழ்வளிக்கும் பணியை உலகிலே பெரிய
அளவில் செய்து வருவது அமெரிக்க ஐக்கிய நாடும் எனவும் உரைத்த Guterres, அமெரிக்க அரசு,
சிரிய அகதிகளுக்கு மறுவாழ்வளிக்கும் திட்டத்தை விரைவில் அறிவிக்கவுள்ளதையும் குறிப்பிட்டார்.