2014-03-08 15:28:19

திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களை நினைவுகூர்கிறார் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


மார்ச்,08,2014. முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் ஒரு புனிதர் என்பதை, அவரோடு இணைந்து பணிசெய்த ஆண்டுகளில் தனக்கு அதிகமதிகமாகத் தெளிவாகியது என்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தெரிவித்துள்ளார்.
முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் பற்றி போலந்து பத்திரிகையாளர் Wlodzimierz Redziochவின் கேள்விகளுக்கு எழுத்துவடிவில் பேட்டிகொடுத்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் ஒரு செப மனிதர் என்பதையும் தான் உணர முடிந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்கள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கான்கிளேவில் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களை முதலில் தான் சந்தித்தது தொடங்கி அவரோடு சேர்ந்து பணி செய்த காலங்களில் தான் கண்டுணர்ந்ததைப் பகிர்ந்துகொண்டுள்ள திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அவர் செபம் செய்ததைப் பார்த்தபோது அவர் கடவுளோடு எவ்வளவுதூரம் ஒன்றிணைந்திருந்தார் என்பதை அறிய முடிந்தது எனவும் கூறியுள்ளார்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் வழங்கிய இப்பேட்டியின் சில பகுதிகள் Corriere della Sera என்ற இத்தாலிய தினத்தாளில் இவ்வெள்ளியன்று பிரசுரமானது.
திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், நம் ஆண்டவரோடு ஒன்றித்திருந்ததே அவரின் மகிழ்ச்சிக்குக் காரணம் என்றும், அவர் ஒருநாளும் கைதட்டல்களை எதிர்பார்க்கவில்லை, தனது தீர்மானங்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து அவர் கருத்தாய் இருந்ததில்லை என்றும், அவர் எப்பொழுதும் தனது விசுவாசத்திலும், தனது நிலைப்பாட்டிலும் உறுதியாய் இருந்தார், எதிர்ப்புக்களை ஏற்பதற்கும் தயாராக இருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.