தவக்காலத்தின் இந்த
முதல் ஞாயிறுக்கான மறையுரையைப்பற்றி அருள்பணியாளர் ஒருவரோடு நான் பேசிக்கொண்டிருந்தேன்.
தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று நமக்குத் தரப்படும் மையக்கருத்து 'சோதனை' என்று நான் சொன்னதுதான்
தாமதம், அவர் உடனே, "சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி" என்ற ஒரு பழைய திரைப்படப் பாடலைப்
பாட ஆரம்பித்தார். தீர்க்கமுடியாத பிரச்சனைகளில் சிக்கிய ஒரு வீட்டுத்தலைவன் பாடுவதாக
இப்பாடல் அமைந்துள்ளது. 'சாமி, இனி எனக்குச் சோதனைகளை அனுப்பாதே' என்று கெஞ்சும் பாணியில்
அமைந்துள்ள இந்த வரியில், சோதனைகளை அனுப்புவது கடவுள் என்ற கருத்து மறைந்துள்ளது. சோதனைகள்
கடவுளிடமிருந்து வருகின்றனவா? அப்படித்தான் நம்மில் பலர் எண்ணுகிறோம். பேசுகிறோம். பிரச்சனைகள்
பல நம்மைச் சூழ்ந்து பயமுறுத்தும்போது, "கடவுளே, ஏன் இப்படிச் சோதிக்கிறாய்?" என்று கடவுளிடம்
முறையிடுகிறோம். அல்லது, "கடவுள் ஏன்தான் இப்படி என்னைச் சோதிக்கிறாரோ, தெரியவில்லை"
என்று மற்றவர்களிடம் குறை சொல்கிறோம். சோதனைகள் கடவுளிடமிருந்து வருகின்றனவா?... என்ற
கேள்விக்கு, இன்றைய நற்செய்தியின் முதல் வரிகள் ஓரளவு பதில் தருவதாக நான் உணர்கிறேன்.
"இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச்
செல்லப்பட்டார்" (மத். 4:1) என்ற வார்த்தைகளை ஆய்வு செய்யும்போது, இரு
எண்ணங்கள் என் மனதில் எழுகின்றன: 1. சோதனைகளைத் தருவது, அலகை. 2. சோதனைகளைச் சந்திப்பதற்கு
நம்மை அழைத்துச் செல்வது, கடவுள். சோதனைகளைச் சந்திக்க, கடவுள் நம்மை 'இழுத்துச் செல்வதில்லை',
'அழைத்துச் செல்கிறார்'.
இத்தகைய அழைப்பை, இறைவன், நம் முதல் பெற்றோருக்கும் தந்தார்.
ஏதேனில் ஒரு தோட்டத்தை உருவாக்கிய, “ஆண்டவராகிய கடவுள்,கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும்,
தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான
மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார்.” (தொ.நூ.
2:9) பின்னர், முதல் பெற்றோரிடம், 'தோட்டத்தின்
நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது; அதைத்
தொடவும் கூடாது.'(தொ.நூ. 3:3)
என்றும் கட்டளையிட்டார். இதை நாம் வாசிக்கும்போது, மனதில் ஒரு நெருடல்... ஒரு மரத்தை
உருவாக்கி, பின்னர், அதைத் தொடக்கூடாது என்று சொல்வதற்குப் பதில், அந்த மரத்தை அவர் படைக்காமலேயே
இருந்திருக்கலாமே என்ற எண்ணம் எழுகிறது. கடவுள் இதைச் செய்திருக்கலாம், அதைச் செய்திருக்கலாம்
என்ற பாணியில் அவ்வப்போது சிந்திக்கும் நம் எண்ணங்களின்படி... கவர்ச்சிகள், சோதனைகள்,
பிரச்சனைகள் என்று எதுவுமே இல்லாத ஓர் உலகை இறைவன் படைத்திருக்கலாமே!... ஏக்கங்கள்
ஏதுமற்ற, தீமை என்றால் என்னவென்றே அறியாதவண்ணம் மனிதர்களை உருவாக்கியிருக்கலாமே!... என்று
நம் எண்ணங்கள் தொடர்கின்றன.
அத்தகைய ஓர் உலகம், அத்தகைய ஒரு படைப்பு, செயற்கையாக
இருந்திருக்கும். தீமையே அறியாத, குறைகளே இல்லாத படைப்பாக நாம் உலவி வந்தால், ஒவ்வொரு
அசைவும் முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டு, இயந்திரகதியில் இயங்கும் 'ரோபோக்களை'ப்போல் (Robot)
நாமும் உலவி வந்திருப்போம். நன்மையையும், தீமையையும், நம் முன் வைத்து, அவற்றில்
நாம் விரும்புவதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையும், சக்தியையும் இறைவன் நமக்கு வழங்குகிறார்.
இதுதான் அவர் தரும் அழைப்பு. ‘சோதனைகளுக்கு நம்மை அழைத்துச் செல்வது இறைவன்’ என்பதை நான்
இவ்வாறு புரிந்துகொள்ள முயல்கிறேன்.
சோதனை என்பது மனிதராய்ப் பிறந்த அனைவரும்
சந்திக்கும் ஓர் அனுபவம். இதற்கு யாரும்... அது, இறைமகன் இயேசுவே ஆனாலும் சரி, விதிவிலக்கு
அல்ல. தன் பணி வாழ்வை ஆரம்பிப்பதற்கு முன், தந்தையாம் இறைவனைத் தனியே சந்திக்கச் சென்றிருந்த
இயேசுவை, அலகையும் சந்தித்தது. அலகை வழி இயேசுவுக்கு வந்த சோதனைகளும், அவற்றை இயேசு சந்தித்த
விதமும் நமக்குப் பாடங்களைச் சொல்லித்தருகின்றன.
சோதனைகள் அழகானவை என்பது முதல்
பாடம். இயேசுவின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் நாடகங்களைப் பார்த்திருக்கேன். அந்த
நாடகங்களில் வரும் சோதனைக் காட்சிகளில், சாத்தான் கருப்பு உடையுடன், முகமெல்லாம் கரி
பூசி, தலையில் இரு கொம்புகள் வைத்து, நீண்ட இரு பற்களோடு பயங்கரமாய் சிரித்துக்கொண்டு
வரும். சிறு வயதில் பல முறை நான் அந்தக் காட்சியைப் பார்த்து பயந்திருக்கிறேன். இவ்வளவு
பயங்கரமாய் சாத்தான் வந்தால், அதை விட்டு ஓடிவிடுவோம், அல்லது அதை விரட்டி அடிப்போம்.
ஆனால், வாழ்வில் நாம் சந்தித்துள்ள, இனியும் சந்திக்க இருக்கும் சாத்தான்களும், அவை கொண்டு
வரும் சோதனைகளும், பயத்தில் நம்மை விரட்டுவதற்குப் பதில், நம்மைக் கவர்ந்திழுக்கின்றன
என்பதுதானே நம் அனுபவம். அலகை தரும் சோதனைகள் அவ்வளவு அழகானவை. மேலோட்டமாகப் பார்த்தால்,
இன்று நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள மூன்று சோதனைகளும் ‘நல்ல’ சோதனைகள். கொலை, கொள்ளை,
ஏமாற்றுதல் என்று தவறான செயல்களைச் செய்யச் சொல்லி அலகை இயேசுவைத் தூண்டவில்லை.
இயேசு
சந்தித்த முதல் சோதனை என்ன? பசியாய் இருந்த இயேசுவிடம் கல்லை அப்பமாய் மாற்றச்
சொன்னது அலகை. இயேசுவிடம் இருந்த சக்தியைப் பயன்படுத்தி அவரது தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளத்
தூண்டியது சாத்தான். நேரம் அறிந்து, தேவை உணர்ந்து வந்த ஒரு சோதனை. தேவைகள் அதிகமாகும்போது,
அந்தத் தேவைகளை உடனேயே தீர்த்துவிடத் துடிக்கும்போது, குறுக்கு வழிகளில் செல்லும் சோதனைகள்
அதிகமாகின்றன. நாம் இன்றைய உலகில் சந்திக்கும் பெரும் சோதனை என்ன? பார்க்கும் அனைத்தையும்
பசிதீர்க்கும் அப்பமாக மாற்றும் சோதனை. தேவைக்கும் அதிகமாக பல்வேறு பசிகளைத் தூண்டும்
'நுகர்வுக் கலாச்சாரம்', நம் சமுதாயம் என்ற உடலில், புரையோடிப்போன புண்ணாக மாறிவருகிறது.
காணும் அனைத்தையும், நம் கைபடும் அனைத்தையும் சுயநலக் கணக்கில் சேர்த்துக்கொள்ளும் வெறியை
இந்த 'நுகர்வுக் கலாச்சாரம்' சொல்லித்தருகிறது. மெல்ல, மெல்ல நம்மைக் கொல்லும் இந்த நச்சுக்
கலாச்சாரத்திலிருந்து நம்மை மீட்கும் ஒரே வழி... இறைவார்த்தையை நம்பி வாழ்வது... சுயநலப்
பசியைவிட இன்னும் உன்னதமான உண்மைகள், உணர்வுகள் இவ்வுலகில் உள்ளன என்ற பாடத்தை முதல்
சோதனை வழியே நமக்குச் சொல்லித்தருகிறார் இயேசு.
இயேசு சந்தித்த இரண்டாவது சோதனை
என்ன? உலகை வெல்வதற்கு, உலகை மீட்பதற்கு எந்தத் தொந்தரவும், துன்பமும் இல்லாத குறுக்கு
வழியொன்றை அலகை இயேசுவுக்குக் காட்டுகிறது. எருசலேம் தேவாலயத்தின் மேலிருந்து இயேசு குதிக்க
வேண்டும். அப்படி குதித்தால், உடனே வானங்கள் திறந்து, விண்ணவர் ஆயிரமாய் இறங்கி வந்து,
இயேசுவின் பாதம் தரையைத் தொடாமல் அவரைத் தாங்கிய வண்ணம் தரைக்குக் கொண்டு வருவார்கள்.
உலக முடிவில் அவர் மாட்சியுடன் வரும் காட்சிக்கு ஓர் ஒத்திகைபோல இது அமையும். எருசலேம்
மக்கள், ஏன்... உலக மக்கள் அனைவரும் இயேசுவின் சீடர்களாகிவிடுவர்.
30 ஆண்டுகள்
மறைந்த வாழ்வு, 3 ஆண்டுகள் கடினமான பணி, இறுதி 3 நாட்கள் கடும் வேதனை, இறுதி 3 மணி நேரங்கள்
சிலுவையின் கொடூரச் சித்ரவதை... இவை எதுவும் இயேசுவுக்குத் தேவையில்லை. ஒரு சில நிமிடங்கள்
போதும். எருசலேம் தேவாலய சாகசம் ஒன்று போதும்... உலகம் இயேசுவின் காலடியில் கிடக்கும்!
சுருக்கமான வழி... எளிதான முயற்சி... எக்கச்சக்கமான வெற்றி. இந்தியாவில் தேர்தல் நாள்கள்
அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேளையில், சுருக்குவழிச் சோதனைகள் பல, சுறுசுறுப்பாக இந்தியாவைச்
சுற்றிச் சுற்றி வருவதை நாம் எண்ணிப்பார்க்கலாம். குறுக்குவழிகளை விடுத்து, நேரிய வழி
செல்லும் தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவோம்.
இவ்விரு
சோதனைகளிலும் சாத்தான் சோதனையை ஆரம்பித்த விதமே அழகான வரிகள்: "நீர் இறைமகன் என்றால்,
இந்தக் கற்கள் அப்பமாகும்படி கட்டளையிடும்." "நீர் இறைமகன் என்றால், கீழே குதியும்."
"நீர் இறை மகன் என்றால்..." என்று சாத்தான் சொல்வதைக் கேட்கும்போது, மற்றொரு ஆழமான
எண்ணமும் எழுகிறது. இறைமகன் எப்படிப்பட்டவராய் இருக்கவேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது
சாத்தான். இறைமகனுக்கு சாத்தான் இலக்கணம் எழுதுகிறது. இந்த இலக்கணத்தின்படி, இறைமகன்
புதுமைகள் நிகழ்த்தவேண்டும், அதுவும் தன்னுடைய சுயத்தேவைகளை நிறைவு செய்ய, தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள
புதுமை செய்ய வேண்டும். தன் சக்தியைப் பறைசாற்ற, புதுமைகள் செய்பவர்கள் வித்தைகள்
காட்டும் மந்திரவாதிகளாய் இருக்கமுடியுமே தவிர, இறைவனாக இருக்கமுடியாது. தன் சுய தேவைகளுக்கு,
சுய விளம்பரத்திற்குப் புதுமைகள் செய்தால், புதுமைகள் செய்யும் சக்தி, அழுக்காகும், அர்த்தமில்லாமல்
போகும்.
இயேசு சாத்தானுக்குச் சொன்ன பதிலில் பாடங்கள் பல உண்டு. இயேசு தன் உடல்
பசியை விட, ஆன்மப் பசி தீர்க்கும் இறைவார்த்தை என்ற உணவைப் பற்றி பேசினார். “மனிதர் அப்பத்தினால்
மட்டும் வாழ்வதில்லை” என்று இணைச்சட்ட நூலில் மோசே சொன்ன வார்த்தைகளைக் கூறுகிறார். (இணை.
8:3) தன் சொந்த பசியைத் தீர்த்துக் கொள்ள மறுத்த இயேசு, பல்லாயிரம் பேரின் பசியைத் தீர்க்க
தன் சக்தியைப் பயன்படுத்தினார் என்பது நமக்குத் தெரியும். நமக்கு இறைவன் கொடுத்துள்ள
சக்திகளை, திறமைகளை எதற்காகப் பயன்படுத்துகிறோம்? சுயத்தேவைகளை நிறைவு செய்யவா? சிந்திக்கலாம்...
இயேசுவிடம் பாடம் கற்றுக் கொள்ளலாம்.
மூன்றாவது சோதனையில் உலகமனைத்தையும்
இயேசுவிடம் ஒப்படைக்க விரும்புவதாக அலகை சொல்கிறது. உலகத்தைத் தன் வசமாக்கத்தானே இயேசு
மனு உருவானார்? இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது, ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே! அப்படி
இயேசு உலகை தன் மயமாக்க வேண்டுமானால், அவர் ஒரு 'அட்ஜஸ்ட்மென்ட்' செய்யவேண்டும். சாத்தானோடு
சமரசம் செய்யவேண்டும்... இல்லை, இல்லை, சாத்தானிடம் சரணடைய வேண்டும். இயேசு அதை திட்டவட்டமாக
மறுத்தார். விளையாடியது போதும் என்று இயேசு சாத்தானை விரட்டி அடித்தார். சாத்தான் முன்
சரணடைய மறுத்த இயேசு, சிலுவையில் தொங்கியபோது, "தந்தையே, உமது கைகளில் என் ஆன்மாவை ஒப்படைக்கிறேன்"
என்று இறைவனிடம் சரணடைந்தார்... உலகைத் தன் வசமாக்கினார். தவறான வழிகள், தவறான சக்திகளுடன்
எத்தனை முறை சமரசம் செய்திருக்கிறோம்? எத்தனை முறை இவை முன் சரணடைந்திருக்கிறோம்? நல்லது
ஒன்று நடக்க வேண்டுமென்று தீமைகளைச் சகித்துக்கொள்வதும், தீமைகள் நடக்கும்போது கண்களை
மூடிக்கொள்வதும்... இவ்விதம் நடப்பது, ஊரோடு ஒத்து வாழ்வதற்காக என்று சமாதானம் சொல்லிக்கொள்வதும்,
நாம் வாழ்க்கையில் அடிக்கடி, பார்த்து, பழகி வந்துள்ள எதார்த்தங்கள். இப்படி சமரசம் செய்வதே
நம் வாழ்க்கையாகி விட்டதா என்று சிந்திப்பது நல்லது. கண்மூடித்தனமாக நுகர்வுக் கலாச்சாரத்தைப்
பின்பற்றி, சுயத்தேவைகளைப் பெருக்கிக் கொள்ளுதல், சுருக்கு வழிகளில் பலன் தேடுதல், சுய
விளம்பரத்திற்காக எதையும் செய்தல், உலகின் தீயச் சக்திகளோடு சமரசம் செய்தல் என்று நம்மை
கவர்ந்திழுக்கும் அழகான சோதனைகளுக்கு நம் பதில் என்ன? இயேசுவிடமிருந்து ஏதாவது பாடங்களை
நாம் கற்றுக் கொள்ள முடியுமா? கற்றுக்கொண்டதை செயலாக்க விருப்பமா? இந்தக் கேள்விகளுக்குப்
பதில் சொல்ல தவக்காலம் நல்லதொரு நேரம்.