இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்குப் பன்னாட்டுக் குழு ஒன்று உருவாக்கப்பட
வேண்டும்
மார்ச்,07,2014. இலங்கையின் உள்நாட்டுப்போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து
விசாரிப்பதற்குப் பன்னாட்டுக் குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தும் அறிக்கை
ஒன்றை ஐ.நா. மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளார் தென்னாப்ரிக்க ஆங்லிக்கன்
பேராயர் டெஸ்மன்ட் டுட்டு. இலங்கையின் நீண்டகால உள்நாட்டுப்போர் 2009ம் ஆண்டில் முடிவுற்றாலும்,
அந்நாட்டில் இன்னும் நிலைத்த அமைதியைக் காண முடியவில்லை என்றும், இலங்கை மக்களின் எதிர்காலம்
குறித்து தாங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜெனீவாவில்
நடந்துவரும் ஐ.நா. மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படுள்ள அவ்வறிக்கையில்,
பேராயர் டெஸ்மன்ட் டுட்டு, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப், உட்பட பல மனித உரிமை அமைப்புகளும்,
இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், பிரேசில், கம்போடியா, நேபாளம், உகாண்டா, கொசோவோ,
ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் மனித உரிமை ஆர்வலர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.