திருப்பீடப் பல்சமய உரையாடல் அவை தலைவர், கர்தினால் Tauranஅவர்களின் பெனின் பயணம்
மார்ச்,05,2014. பெனின் நாடு இதுவரை போர் என்ற அனுபவமே இல்லாமல் வாழ்ந்து வருவதால், அங்கு,
உரையாடலும், ஒற்றுமையும் உறுதியாக வாழ்கிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். திருப்பீடப்
பல்சமய உரையாடல் அவையின் தலைவர், கர்தினால் Jean-Louis Tauran அவர்கள், மார்ச் 2, கடந்த
ஞாயிறு முதல், இப்புதன் முடிய ஆப்ரிக்காவின் பெனின் நாட்டில் மேற்கொண்ட மேய்ப்புப்பணி
பயணம் குறித்து வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். பெனின்
நாட்டின் Cotonou என்ற நகரில் நடைபெற்ற பல்சமய கருத்தரங்கில் தலைமை ஏற்ற கர்தினால் Tauran
அவர்கள், அந்நாட்டின் அரசுத் தலைவர் Boni Yayi அவர்களையும், ஏனைய அரசு அதிகாரிகளையும்,
அந்நாட்டின் ஆயர் பேரவை உறுப்பினர்களையும் சந்தித்தார். அமெரிக்க நாடுகளுக்கு அனுப்பப்பட்ட
அடிமைகள், ஆப்ரிக்காவிலிருந்து இறுதியாகக் கிளம்பிய துறைமுகம் 'திரும்பிவர முடியாத வாசல்'
என்ற பெயரில் Ouiddah நகரில் அமைந்துள்ளது. இந்தத் துறைமுகத்தையும், Ouiddah என்ற நகரில்
அமைந்துள்ள அருள் பணியாளர் பயிற்சி இல்லத்தையும் தன் மேய்ப்புப்பணி பயணத்தின் இறுதி நாளன்று,
கர்தினால் Tauran அவர்கள் பார்வையிட்டார்.