கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்களை எரித்துக் கொன்ற குற்றத்தில் பழி சுமத்தப்பட்ட இருவர்,
ஓடிஸா நீதிமன்றம் விடுவிப்பு
மார்ச்,05,2014. 1999ம் ஆண்டு, ஓடிஸா மாநிலத்தில் கிறிஸ்தவ மறைப்பணியாளர் கிரகாம் ஸ்டெயின்ஸ்
அவர்களையும், சிறுவயதே நிறைந்த அவரது இரு மகன்களையும் ஜீப்பில் எரித்துக் கொன்ற குற்றத்தில்
பழி சுமத்தப்பட்ட இருவரை ஓடிஸா நீதிமன்றம் விடுவித்தது. 1999ம் ஆண்டு, சனவரி 22ம்
தேதி, கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்களும், அவரது 6 வயது மகன் திமோத்தியும், 10 வயது மகன் பிலிப்பும்
எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தாராசிங், மற்றும் மகேந்திர ஹெம்ப்ரம் என்ற இருவருக்கும்
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தொடர்புடையவர்களென கைது செய்யப்பட
கனஷ்யாம், இரஞ்சன் ஆகிய இருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்குத் தகுந்த ஆதாரங்கள்
இல்லையென்று, இவ்விருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஓடிஸா மாநிலத்தில் தொழுநோயாளர்
குடியிருப்பு ஒன்றை நிறுவி, பணியாற்றிவந்த கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்களும், அவரது மனைவி,
கிளாடிஸ் ஸ்டெயின்ஸ் அவர்களும், மக்களை மதமாற்றம் செய்கின்றனர் என்று பொய்க்குற்றம் சுமத்தி,
இந்து அடிப்படைவாதக் கும்பல் ஒன்று, இந்த தீவைப்பு வன்முறையில் ஈடுபட்டது. தன் கணவரை
எரித்துக் கொன்ற அனைவரையும் தான் மன்னித்துவிட்டதாக, கிளாடிஸ் ஸ்டெயின்ஸ் அவர்கள் பல
ஆண்டுகளுக்கு முன்னரே ஊடகங்களுக்கு அறிவித்தது குறிப்பிடத் தக்கது.