திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி / திருத்தந்தையுடன் இஸ்பானிய ஆயர்கள் சந்திப்பு
மார்ச்,03,2014. 'திருமணவாழ்வை எவ்வாறு நன்முறையில் மேற்கொள்வது?' நம் அன்பை எப்போதும்
புதுப்பித்து, நம் அனைத்து இடர்பாடுகளை வெற்றிகொள்ளவேண்டிய பலத்தை வழங்கும் இறைவனுடன்
ஒன்றித்திருப்பதன்வழி' என தன் டுவிட்டர் பக்கத்தில் இத்திங்களன்று எழுதியுள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ். மேலும், இத்திங்களன்று 'அட் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்திருந்த
இஸ்பெயின் நாட்டு ஆயர்களை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,
இன்றைய நவீன உலகில், இறைவன் தூரமாக ஒதுக்கிவைக்கப்பட்டு, உலக இன்பங்களுக்கு முக்கியத்துவம்
கொடுக்கப்படுவதை கவனத்தில் கொண்டு செயலாற்றவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இயேசுவின்
நற்செய்தியை அறிவித்தல் என்பது நம் எடுத்துக்காட்டுக்கள், போதனை மற்றும் நம் அருகாமை
மூலம் மக்களின் மனங்களில் ஊன்றப்பட்டு, வளர்ச்சி காணவேண்டும் என்பதையும் எடுத்துரைத்தத்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் பணிவிடை பெறுவதற்கல்ல, பணிவிடை புரியவே அழைப்புப்
பெற்றுள்ளோம் எனவும் கூறினார். இஸ்பானிய புனிதர் இயேசுவின் திரேசா அவர்கள் பிறந்ததன்
500ம் ஆண்டு திருஅவையில் விரைவில் சிறப்பிக்கப்படவுள்ளது குறித்தும் இஸ்பானிய ஆயர்களிடம்
கலந்துரையாடினார் திருத்தந்தை.