புனித ஜான் இலாத்தரன் குருத்துவ மாணவர் இல்லத்துக்கு திருத்தந்தை பிரான்சிஸ்
பிப்.27,2014. பிப்ரவரி 28 இவ்வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் புனித ஜான் இலாத்தரன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள உரோம் நகரின்
அருள்பணியாளர்கள் பயிற்சி இல்லத்துக்குச் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி
28 இவ்வெள்ளியன்று கொண்டாடப்படும் நம்பிக்கையின் நாயகியான அன்னைமரியாவின் திருநாளன்று,
அவ்வன்னையின் பெயரால் தொடங்கப்பட்ட இப்பயிற்சி இல்லத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களை,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துவக்கி வைக்கிறார். இப்பயிற்சி இல்லத்தில் தங்கியுள்ள
குருமாணவர்களையும், பயிற்சியாளர்களையும் சந்திக்கும் திருத்தந்தை, குருமாணவர்கள் எழுப்பும்
சில கேள்விகளுக்குப் பதில் அளிப்பார் என்றும், இதைத் தொடர்ந்து பயிற்சி இல்லத்தில் மாலை
செபவழிபாட்டிலும், இரவு உணவிலும் பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி
28 இவ்வெள்ளியன்று துவங்கும் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள், மார்ச் 1ம் தேதி சனிக்கிழமையன்று
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சார்பில் உரோம் மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றும் கர்தினால்
அகுஸ்தினோ வல்லினி அவர்கள் தலைமையேற்று நடத்தும் திருப்பலியுடன் நிறைவுறும்.