போர் ஆயுதமாக பாலியல் வன்செயல் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க உச்சி மாநாடு
பிப்.26,2014. பாலியல் வன்செயல் போர் ஆயுதமாகப் பயன்படுத்துவதை தடுப்பது குறித்து விவாதிக்க
உலகத் தலைவர்களின் உச்சி மாநாடு ஒன்று இலண்டனில் வரும் ஜூன் மாதத்தில் கூட்டப்படும் என்று
பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் William Hague அறிவித்துள்ளார். இந்த மாநாட்டில்
140 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், இராணுவ, காவல்துறை மற்றும் சட்ட வல்லுனர்கள் கலந்துகொள்ள
அழைப்பு விடுக்கப்படும் என்று Hague கூறியுள்ளார். மோதல்கள் நடக்கும் பகுதிகளில் பாலியல்
வன்முறை குறித்து கவனம் செலுத்தும் மிகப்பெரும் மாநாடாக இது அமையும் என்றும் Hague கூறியுள்ளார். பாலியல்
வன்செயலுக்கு எதிராக வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது இந்த மாநாட்டின் நோக்கம் என்றும்,
இந்த நெறிமுறைகள் அனைத்துலக அமைதி நடவடிக்கைகள் உட்பட, இராணுவத்தினருக்கு வழங்கப்படும்
பயிற்சி மற்றும் யுக்திகள் பயிற்றுவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். பாலியல் வன்செயல்கள்
நடப்பதை ஒழிக்கும் முயற்சிகளை உலக நாடுகள் நீண்ட காலமாகவே தவிர்த்து வந்திருக்கின்றன
என்றும் Hague வாஷிங்டனில் கூறினார்.