நாம் அனைவரும் வாழும் நற்செய்திகளாக மாறுவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம், திருத்தந்தை பிரான்சிஸ்
பிப்.25,2014. திருமுழுக்கு பெற்ற நாம் அனைவரும் மறைபோதகத் திருத்தூதர்கள், நாம் உலகில்
வாழும் நற்செய்திகளாக மாறுவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என, இச்செவ்வாய் தனது டுவிட்டர்
செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், மறைந்த திருத்தந்தை 6ம்
பவுல் அவர்களின் பரிந்துரையால் நடைபெற்ற புதுமை ஒன்றை, திருப்பீட புனிதர் நிலைக்கு உயர்த்தும்
பேராயத்தின் ஆலோசனை இறையியலாளர் குழு ஏற்றுக்கொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. தாயின்
கருப்பையில் கடும் பிரச்சனைகளை எதிர்நோக்கிய குழந்தை ஒன்று திருத்தந்தை 6ம் பவுல் அவர்களின்
பரிந்துரையால் முழுவதும் குணமாகிப் பிறந்துள்ளது. தற்போது அதன் நலவாழ்வும் நன்றாக உள்ளது
எனச் சொல்லப்பட்டுள்ளது. 1990களின் மத்தியில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிஃபோர்னியாவில்
தாயின் கருப்பையில் வளர்ந்த குழந்தை ஒன்று கடும் பிரச்சனைகளை எதிர்நோக்கியது, இந்நோய்
மூளைச் சிதைவுக்குக் காரணமாகக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்தனர், மருத்துவர்கள் அக்குழந்தையைக்
கருக்கலைப்பு செய்துவிடுமாறும் ஆலோசனை கூறினர், ஆனால் அக்குழந்தையின் தாய் திருத்தந்தை
6ம் பவுல் அவர்களிடம் செபித்தார். அக்குழந்தை எவ்விதப் பிரச்சனையுமின்றி பிறந்ததென அறிவிக்கப்பட்டுள்ளது.