2014-02-24 16:55:21

கத்தோலிக்க சமூகத்தொடர்பு சாதனங்களின் பணி குறித்து திருத்தந்தை


பிப்.24,2014. 'அமைதி கலாச்சாரத்திற்காக சமூகத்தொடர்புச் சாதனங்கள்' என்ற தலைப்பில் இச்செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமை வரை இடம்பெறும் உலகக் கருத்தரங்கிற்கு தன் சிறப்புச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சமூகத்தொடர்புக்கான உலகக் கத்தோலிக்க அமைப்பான SIGNISன் கருத்தரங்கு உரோம் நகரில் இடம்பெறுவதற்கு தன் வாழ்த்துக்களையும் ஊக்கத்தையும் உள்ளடக்கிய செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை, வருங்கால சமுதாயத்தின் அக்கறை, நம்பிக்கை, மற்றும் அனுபவங்களை நன்முறையில் வடிவமைப்பது குறித்து இக்கருத்தரங்கு விவாதிக்க உள்ளது பற்றி தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.
சமூகத்தின் அங்கத்தினர்கள் என்ற முறையிலும், தனிப்பட்ட முறையிலும் தங்கள் வாழ்வின் நோக்கத்தையும் அர்த்தத்தையும் தேடும் மக்களின் இதயத்தையும் மனதையும் தொடும் வகையில், நற்செய்தியின் அழகையும் உண்மையையும் எடுத்துரைக்க, கத்தோலிக்க சமூகத்தொடர்புச் சாதனக்கள் எடுத்துவரும் முயற்சிகளையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியில் பாராட்டியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.