கடவுள் நம்மை எப்போதும் அன்பு கூருகிறார், திருத்தந்தை பிரான்சிஸ்
பிப்.22,2014. நம்பிக்கையை ஒருபோதும் இழக்காதிருப்போம்! கடவுள் நம்மை எப்போதும், நம்
தவறுகள் மற்றும் நம் பாவங்களுடன்கூட அவர் நம்மை அன்பு கூருகிறார் என்று, தனது டுவிட்டர்
செய்தியில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், வருகிற
அக்டோபர் 5 முதல் 19 வரை வத்திக்கானில் நடைபெறவிருக்கும் குடும்பம் பற்றிய உலக ஆயர்களின்
சிறப்பு மாமன்றத்துக்கு, பிரான்ஸ், பிலிப்பின்ஸ், பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 3
கர்தினால்களைத் தலைவர்களாக நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்வெள்ளியன்று
நடைபெற்ற கர்தினால்கள் அவையின் சிறப்புக் கூட்டத்தில் இத்தலைவர்களை அறிவித்தார் திருத்தந்தை.
பாரிஸ் கர்தினால் Andre Vingt-Trois, மனிலா கர்தினால் Luis Tagle, பிரேசிலின் Aparecida
கர்தினால் Raymundo Assis ஆகிய மூவரும் குடும்பம் பற்றிய உலக ஆயர்களின் சிறப்பு மாமன்றத்துக்குத்
தலைவர்களாகச் செயல்படுவார்கள். 2015ம் ஆண்டில் நடைபெறும் உலக ஆயர்கள் மாமன்றமும்
குடும்பம் குறித்தே அமையும் எனவும் அறிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.