இச்சனிக்கிழமை திருவழிபாட்டில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
பிப்.22,2014. இச்சனிக்கிழமையன்று தூய பேதுரு பசிலிக்கா பேராயலத்தில், 18 புதிய கர்தினால்களுக்கு,
சிவப்புத் தொப்பியும், மோதிரமும் வழங்கப்பட்ட திருவழிபாட்டில் முன்னாள் திருத்தந்தை 16ம்
பெனடிக்ட் அவர்களும் பங்கெடுத்தார். இத்திருவழிபாட்டைத் தொடங்குவதற்கு முன்னர் திருத்தந்தை
16ம் பெனடிக்ட் அவர்கள் அமர்ந்திருந்த இருக்கைக்குச் சென்று அவரை வாழ்த்தினார் திருத்தந்தை
பிரான்சிஸ். இத்திருவழிபாட்டில் அனைத்துக் கர்தினால்களின் பெயரில் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் இப்புதிய கர்தினால்களில் ஒருவரான திருப்பீடச் செயலர்
பேராயர் பியத்ரோ பரோலின். புதிய கர்தினால்களுள் இருவர் ஆசியர்கள். தென் கொரியாவின்
செயோல் பேராயர் Andrew Yeom Soo jung அவர்களும், பிலிப்பின்சின் Cotabato பேராயர் Orlando
Quevedo அவர்களும் இவ்விருவர் ஆவர். இச்சனிக்கிழமையோடு திருஅவையில் மொத்தக் கர்தினால்களின்
எண்ணிக்கை 218. இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்டவர்கள்
122. தற்போது முதன்முறையாக, ஐரோப்பாவிலிருந்து 61 கர்தினால்களும், உலகின் பிற பகுதிகளிலிருந்து
61 கர்தினால்களும் உள்ளனர். இன்னும், இஞ்ஞாயிறு காலை 10 மணிக்கு புதிய கர்தினால்களுடன்
திருப்பலியும் நிகழ்த்துவார் திருத்தந்தை பிரான்சிஸ்.