பிப்.21,2014. உலகின் அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கு பலமொழித் தன்மையை ஊக்குவிக்க
வேண்டுமென்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார். பிப்ரவரி 21, இவ்வெள்ளியன்று
சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக தாய்மொழி தினத்திற்கென வெளியிட்டுள்ள செய்தியில், நல்லதோர்
உலகை அமைக்கவும், அனைவரும் மாண்புடைய வாழ்வைப் பெறுவதற்குமான நமது முயற்சியில் மொழிகளின்
பன்மைத்தன்மை ஊக்குவிக்கப்பட வேண்டுமென்று கூறியுள்ளார் பான் கி மூன். ஒருவர் புரிந்துகொள்ளும்
மொழியில் அவரிடம் பேசினால் அது அவரது மூளைக்குச் செல்கின்றது என்றும், ஒருவரின் தாய்
மொழியில் அவரிடம் பேசினால் அது அவரது இதயத்துக்குச் செல்கின்றது என்றும் மெல்சன் மண்டேலா
அவர்கள் கூறியதையும் பான் கி மூன் தனது செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார். பல மொழிக்
குடும்பங்களைக் கொண்ட இந்தியாவில் 74 விழுக்காட்டு மக்கள் இந்தோ-ஆர்யன் மொழியையும், 24
விழுக்காட்டு மக்கள் தமிழ் மொழியை உள்ளடக்கிய திராவிட மொழியையும் பேசுகின்றனர். இந்தியாவில்
22 மொழிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.