பிப்.21,2014. பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகள் ஆபத்தை விளைவிக்கும் என,
பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட அண்மை ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. உணவுப் பொருட்களைப்
பாக்கெட்டுகளில் அடைக்கும்போது, அவற்றைப் பாதுகாப்பாக வைப்பதற்கும், பதப்படுத்துவற்குமென
பார்மால்டிஹைடு என்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன என அந்த ஆய்வு கூறுகிறது. தாகத்தைத்
தணிப்பதற்காகக் குடிக்கும் குளிர்பானங்களைச் சேமிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும்
சாப்பாட்டு மேஜையில் உள்ள தட்டுகள் போன்ற பொருட்களில் பார்மால்டிஹைடு வேதிப்பொருள் சிறிய
அளவில் சேர்க்கப்படுகின்றது எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதுதவிர உணவைப் பாதுகாக்கப்
பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களின் எண்ணிக்கை நான்காயிரத்தைத் தாண்டும் எனவும், தற்போது
உணவுப்பொருட்கள் பேக்கிங் செய்யப்படுவது அதிகரித்துவரும் நிலையில், அது குறித்த விழிப்புணர்வை
மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும்
பரவலாகக் காணப்படும் இந்த வேதிப்பொருட்கள் புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டவை என்பது
குறிப்பிடத்தக்கது.