லாகூர் உயர்மறை மாவட்டத்தில் புதிய பேராயர் பொறுப்பேற்றது புது வசந்தத்தை உருவாக்கியுள்ளது
- பாகிஸ்தான் நாட்டுக்கான திருப்பீடத் தூதர்
பிப்.20,2014. பாகிஸ்தானின் லாகூர் உயர்மறை மாவட்டத்தில் புதிய பேராயர் பொறுப்பேற்ற நிகழ்வு
ஒரு புது வசந்தத்தை உருவாக்கியுள்ளது என்று பாகிஸ்தான் நாட்டுக்கான திருப்பீடத் தூதர்
பேராயர் Edgar Pena Parra அவர்கள் கூறினார். லாகூரின் புதியப் பேராயராக, Sebastian
Francis Shaw அவர்கள் பொறுப்பேற்ற திருப்பலியில் உரையாற்றிய பேராயர் Pena Parra அவர்கள்,
இந்த நிகழ்வு, லாகூர் உயர் மறைமாவட்டத்திற்கு மட்டுமல்லாமல், பாகிஸ்தான் முழுமைக்கும்
நம்பிக்கை தரும் ஒரு நிகழ்வு என்று கூறினார். 1880ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, கடந்த
134 ஆண்டுகளாக, பல்வேறு போராட்டங்கள் மத்தியில் வளர்ந்துவந்துள்ள லாகூர் உயர் மறைமாவட்டம்
நற்செய்திப் பணிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்பதை பேராயர் Pena Parra
அவர்கள் எடுத்துரைத்தார். 1950ம் ஆண்டு இரு மறைமாவட்ட அருள் பணியாளர்களையும், 78,000
கத்தொலிக்கர்களையும் கொண்டிருந்த லாகூர் மறைமாவட்டம், தற்போது 30 மறைமாவட்ட அருள் பணியாளரையும்,
5,70,000 கத்தோலிக்கர்களையும் கொண்டுள்ளது என்று பேராயர் Pena Parra அவர்கள் தன் உரையில்
சுட்டிக்காட்டினார். 1957ம் ஆண்டு பிறந்த பேராயர் Shaw அவர்கள், 1991ம் ஆண்டு குருவாகவும்,
2009ம் ஆண்டு லாகூர் உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.
கடந்த வாரம், பிப்ரவரி 14ம் தேதியன்று அவர் பேராயராகப் பொறுப்பேற்றார்.