பிரித்தானிய அரசின் சிக்கன நடவடிக்கைகளுக்குப் பேராயர் நிக்கோல்ஸ் கண்டனம்
பிப்.15,2014. பிரித்தானிய அரசின் சிக்கன நடவடிக்கைகள், பசிபட்டினி மற்றும் ஆதரவற்ற நிலைக்கு
உள்ளாகும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்பதால் அரசின் இந்நடவடிக்கைகள் வெட்கத்துக்குரியன
என்று குறை கூறியுள்ளார் வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ். Telegraph
தினத்தாளுக்கு அளித்த பேட்டியில், பிரித்தானிய அரசின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு
தெரிவித்துள்ள பேராயர் நிக்கோல்ஸ் அவர்கள், பிரிட்டனில் செலவினங்களைக் குறைக்க வேண்டுமென்ற
தேவை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளபோதிலும், அரசின் சீர்திருத்தங்கள் அடிப்படை பாதுகாப்பு
அமைப்பையே அழிப்பதாக உள்ளன எனக் கூறியுள்ளார். பிரிட்டன் போன்ற பணக்கார நாடுகளுக்கு,
அரசின் இச்சிக்கன நடவடிக்கைகள் அவமானமாக உள்ளன என்றும் தெரிவித்த பேராயர் நிக்கோல்ஸ்
அவர்கள், பொதுவான செலவினங்களில் சிக்கனமாக இருக்கவேண்டும் என்பதை மக்கள் உணர்ந்தே உள்ளார்கள்
என்றும் கூறியுள்ளார். இம்மாதம் 22ம் தேதி வத்திக்கானில் நடைபெறும் Consistoryயில்
பேராயர் நிக்கோல்ஸ் அவர்கள் கர்தினாலாக உயர்த்தப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.