2014-02-10 15:12:42

வாரம் ஓர் அலசல் - புன்னகையும் மன அழுத்தமும்


பிப்.10,2014. Ratan Kumar Malbisoi என்ற 41 வயது படிப்பறிவற்ற கிராமத்தவருக்கு, ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கைபேசியில் ஒரு செய்தி வந்தது. அவருக்கு பிபிசி தேசியப் பரிசு குலுக்கலில் 3 கோடி ரூபாய் கிடைத்துள்ளது, அவர் தன்னைப் பற்றிய விபரங்களை அனுப்பினால் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அச்செய்தியில் இருந்தது. இந்தச் செய்தி உண்மையல்ல, போலியானது என்பதை உணரும் அளவுக்கு Malbisoi கல்வியறிவு பெறவில்லை. அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, தன்னை ஏமாற்றிய அந்த ஆள்களுடன் பல தடவைகள் தொலைபேசியில் பேசியிருக்கிறார், அவர்களுடன் தொடர்பு வைத்து தனது வங்கிக் கணக்கு மற்றும் பிற விபரங்களையும் அனுப்பியிருக்கிறார். தனக்கு அவர்கள் வாக்குறுதி கொடுத்த பணத்தை விரைவில் அனுப்புமாறு கேட்டுக்கொண்டே இருந்து பணம் கைக்கு வராததால், நேரிடையாக டெல்லிக்குச் செல்லவும் முடிவெடுத்து பயணத்தைத் தொடர்ந்தார். ஒரிசா மாநிலத்தின் ஒரு கடைக்கோடிக் கிராமத்திலிருந்து 1700 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து டில்லியிலுள்ள பிபிசி அலுவலகத்துக்குச் சென்று தனது பணத்தைக் கேட்டார் என, கடந்த வாரத்தில் பிபிசி செய்தியில் பிரசுரமாகியிருந்தது. கடும் குளிராக இருக்கும் இந்நாள்களில், சாதாரண ஒரு சட்டையுடன் முந்திய இரவே இரயிலில் வந்து டெல்லியில் நடைபாதையில் தங்கிவிட்டு காலையில் பிபிசி அலுவலகம் வந்து சேர்ந்தார். இந்தப் பயணத்துக்குத் தேவையான பணத்தை தனது நண்பர்களிடமிருந்து கடனாகவும் பெற்றுள்ளார். இந்த மாதிரியான போலிச் செய்திகளால் பலர் விழித்துக் கொண்டாலும், Malbisoi போன்று ஏமாற்றம் அடைந்தவர்கள் பற்றி நாம் அவ்வப்போது கேள்விப்படுகிறோம். இந்தியாவில் 89 கோடிப் பேர் கைபேசிகளைப் பயன்படுத்துவதாகச் செய்திகள் கூறுகின்றன. Malbisoi போன்று எத்தனை பேர் ஏமாறுகிறார்களோ என்று நினைத்து மனது வருந்தியது. எனக்குத் தெரிந்த இருவர் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பி ஏமாந்துள்ளனர்.
1700 கிலோ மீட்டர் தூரப் பயணத்துக்குக் கடன் வாங்கி, நடுக்கும் குளிரில் கஷ்டமான பயணம் செய்து டில்லி அடைந்துள்ளார் Ratan Kumar Malbisoi. இவ்வளவு கஷ்டத்துக்குப் பின்னர், தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று அறிந்தவுடன் Malbisoiவின் மனநிலை எப்படி இருந்திருக்கும்?. படிப்பறிவில்லாத இந்த அப்பாவி மனிதரை ஒரு நிமிடம் நினைத்துப் பார்ப்போமே! முதல் 10 உயிர்க்கொல்லி நோய்களின் வரிசையில் உலகில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 7வது இடத்திலிருந்த மனஅழுத்த நோய் தற்போது 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என, கடந்த வெள்ளியன்று மதுரையில் நடந்த விழா ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தின் மாநகராட்சிகளில் மதுரை கொடிக்குளத்தில் முதன்முறையாக, 2012ம் ஆண்டு டிசம்பரில், மனநல மருந்தகம் மற்றும் மதுபோதை மாற்றுச் சிகிச்சை மையம் ஒன்று திறக்கப்பட்டது. அதில் குணமடைந்தவர்களை வாழ்த்தும் விழாவில் மருத்துவர்கள் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டனர். உலகில், பெருகிவரும் மக்கள்தொகையும், மாறிவரும் வாழ்க்கைச் சூழலும், மன அழுத்தத்தின் தாக்கத்தை அதிகப்படுத்துகின்றன. தற்போதுள்ள நிலை நீடித்தால், 2020ம் ஆண்டில், மனிதரைக் கொல்லும் முதல் 10 நோய்களில், மன அழுத்த நோய்' முதலிடத்தில் இருக்கும் என உலக நலவாழ்வு நிறுவனமும் எச்சரித்துள்ளது.
இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் Nido Taniam என்ற 19 வயது மாணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி 300க்கும் அதிகமான மாணவர்கள் கடந்த வாரத்தில் டெல்லி நாடாளுமன்றக் கட்டிடத்தின் முன்பாக நீதிகேட்டுப் போராடினர். இன்று போராட்டங்களும் வன்முறைகளும் அதிகரித்து விட்டன. இதனால் மனஅழுத்தங்களால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. இன்றைய இளைய தலைமுறையினர், குறிப்பாக, 21 முதல் 45 வயது வரையான இடைப்பட்ட வயதினர் மன அழுத்தத்தில் அதிகமாக தவிக்கின்றனர். அதுவும் கடந்த 5 ஆண்டுகளில் அதிக அளவில் இந்த வயதினருக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக உலக நலவாழ்வு நிறுவனத்தின் கணக்கெடுப்புக் கூறுகிறது. 72 விழுக்காட்டு எழுத்தாளர்கள், 42 விழுக்காட்டுக் கலைஞர்கள், 41 விழுக்காட்டு அரசியல்வாதிகள், 36 விழுக்காட்டு வல்லுனர்கள், 35 விழுக்காட்டு இசைக்கலைஞர்கள், 33 விழுக்காட்டு அறிவியலாளர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். மென்பொருள் துறையில் உள்ள இளையோரில் 76 விழுக்காட்டினருக்கு மன அழுத்தம் உள்ளது. அதுபோல 58 விழுக்காட்டினர் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர் என்பதும் அதிர்ச்சியான தகவல். நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பெண் அதிகாரி பகிர்ந்து கொண்டதைக் கேட்போமே.
மன அழுத்தத்தின் உச்சநிலையாக ஏற்படுவது தற்கொலை. உலகில் 40 நொடிக்கு ஒரு மனித உயிர் இழக்கப்படுகிறது. இந்தியாவில் 5 நிமிடத்திற்கு ஒருமுறை தற்கொலை நிகழ்கிறது. 18 முதல் 45 வயதினர்தான் அதிக அளவில் தற்கொலை எண்ணத்திற்கு ஆளாகின்றனர். ஆண்டுக்கு ஒரு இலட்சம் பேருக்கு மேல் தற்கொலையில் மடிகின்றனர். உலகில் நடக்கும் தற்கொலைக்கான காரணங்களில், முதல் இடத்தில் இருப்பது மன அழுத்தமே. இந்த மன அழுத்தம், மனநெருக்கடி எல்லா வயதினரையும் தாக்குகிறது. நீயா நானா நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற ஒருவர் சொல்வதைக் கேட்போமே...
Stress எனச் சொல்லப்படும் மன அழுத்தம், கணவன்- மனைவி, குடும்ப உறுப்பினர், இவர்களின் உறவுச் சிக்கல்களால் சாதாரணமாக ஏற்படுகின்றது. மணமுடித்தல், புதுமனைபுகுதல், நோய்வாய்ப்பட்ட குடும்ப உறுப்பினரைப் பேணுதல், குழந்தை பெறுதல் முதலானவையும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். குறைவான நேரத்தில் பல்வேறு பணிகளைச் செய்ய வேண்டிய கட்டாயம், பணியையோ அல்லது உடன் பணி செய்பவர்களையோ விரும்பாமல் இருப்பது, புதுப் பணிகள், உடல்நலன், உறக்கமின்மை போன்றவையும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த மன அழுத்தங்களில் நல்ல மன அழுத்தம் கடினமாக உழைக்கவும், செயல்களைச் செம்மையாகச் செய்யவும் வழிவகுக்கும். நாம் சிறப்பாகப் பணிபுரிய சிறிதளவு மன அழுத்தம் தேவை என்றாலும் அது குறைந்த அளவில் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். தீய அல்லது அளவுக்கதிகமான மன அழுத்தம் ஒரு மனிதரிடம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி அவை உடலில் அல்லது உணர்ச்சியின் அறிகுறிகளாக வெளிப்படும். இதனால் இவை மனிதரை அளவுக்கதிகமாக மது பானங்களைக் குடிக்கவும், உலகை மறக்க வைக்கும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகவும் தூண்டுகின்றன.
அதோடு, இதயநோய், உயர் இரத்தஅழுத்தம், அடிக்கடி தலைவலி வருதல், தலைச்சுற்றல், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், குடல்புண் போன்ற உடல் நலக்குறைகளும் மன அழுத்தத்தால் ஏற்படும். சோர்வு, ஏக்கம், கவலை, உறக்கமின்மை, பயம், தாழ்வுமனப்பான்மை, முன்கோபம், சமூக வாழ்வில் தடுமாற்றம் போன்ற மனம் அல்லது உணர்ச்சி சார்ந்த அறிகுறிகளும் மன அழுத்தத்தால் ஏற்படும்.
மன அழுத்தம் குணமாக்க முடியாத நோய் அல்ல. மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு முதலில் அது குறித்த விழிப்புணர்வு தேவை என்கிறார் எழுத்தாளரும் சமய சொற்பொழிவாளருமான திருவாளர் சுகி.சிவம். மன அழுத்தத்தைக் குறைக்க, முதலில் கடவுள் நம்பிக்கை அவசியம். எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் இறைவன் ஒருபோதும் கைவிடமாட்டார் என்ற அசையா நம்பிக்கை மிகவும் முக்கியம். தியானம், செபம், யோகாசனம், சுவாசப்பயிற்சி ஆகியவையும் மன நெருக்கடியைக் குறைக்கும். மேலும், உடலும் மனமும் ஓய்வு கொள்ளவும், புத்துணர்வைப் பெறவும் இடையிடையே ஓய்வு எடுப்பது, நல்ல இசையைக் கேட்பது, மனம்விட்டுச் சிரிப்பது, விளையாடுவது, நடப்பது, உடற்பயிற்சிகள் செய்வது, அதிக நேரம் குளிப்பது, வழக்கமான பணியிலிருந்து கொஞ்சம் விடுபட்டு புதுச்செயல்களில் ஈடுபடுவது, அழவேண்டிய நேரத்தில் அழுவது போன்றவையும் உதவும். நல்ல கருத்துப் பரிமாற்றம், எதையும் நேரிய எண்ணத்துடன் பார்த்தல், பேசுதல் போன்றவை மன அழுத்தத்தைக் குறைக்கும். நல்ல சீரான உணவு உண்பதும் உடல்நலனுக்கு உதவும். ஒரு குருஜி சொல்கிறார் ...
இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது. நேசநாடுகளின் தலைவராக இருந்த ஐசனோவர் போர் நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். கிட்லரும் முசோலினியும் அவரைக் கொல்ல வழி தேடினர். ஒருநாள் பாதுகாப்புப் படையினர் புடைசூழப் பயணம் செய்துகொண்டிருந்தார் ஐசனோவர். வழியில் ஒரு வயதான தம்பதியர் தளர்ந்த நடையுடன் நடந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்ததும் பரிவுகொண்ட ஐசனோவர் அவர்கள் அருகே காரை நிறுத்தினார். அத்தம்பதியர் புன்னகையுடன் அவரை வணங்கினர். அத்தம்பதியரைக் காரில் ஏற்றிய ஐசனோவர், பாதுகாப்புப் படையினரிடம், நீங்கள் போங்கள், போர்க்களத்தையே பார்த்து நிற்கும் எனக்கு இவர்களின் புன்னகை இதமாக உள்ளது, நான் இவர்களின் இடம்வரை சென்று இவர்களை அனுப்பிவிட்டு வருகிறேன் என்று சொன்னார். பாதுகாப்பு வண்டிகள் பறந்தன. அவ்வண்டிகளில் ஐசனோவர் இருக்கிறார் என்று எண்ணிய கிட்லர் படைகள் குண்டுகளை வீசி ஒரு நொடியில் அவற்றை அழித்தன.
புன்னகையும் பிறர்நலச் செயல்களும் மன அழுத்தத்தைப் போக்கும் சிறந்த மருந்துகள். எனவே நன்மை செய்வதில் மனந்தளராமல் இருந்து மன அழுத்தமின்றி வாழ்வோம்







All the contents on this site are copyrighted ©.