லெபனன் நாட்டை ஒன்றிணைந்து கட்டியெழுப்புமாறு அரசியல்வாதிகளுக்கு முதுபெரும் தந்தை வேண்டுகோள்
பிப்.07,2014. தனது வரலாற்றில் ஒரு முக்கியமான காலக்கட்டத்தில் சென்றுகொண்டிருக்கும்
லெபனன் நாட்டை ஒன்றிணைந்து கட்டியெழுப்புவதற்கு அரசியல்வாதிகளுக்கு இக்காலம் நல்ல வாய்ப்பாக
அமைந்துள்ளது என்று அந்நாட்டு மாரனைட் கத்தோலிக்க வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை Al-Rahi
கூறியுள்ளார். லெபனன் ஆயர்களின் மாதக் கூட்டத்தின் இறுதியில் அந்நாட்டின் அரசியல்வாதிகளுக்கென
பொதுவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முதுபெரும் தந்தை Al-Rahi, 1920ம் ஆண்டில் அமைக்கப்பட்ட
கோட்பாடுகளின் வழியில் லெபனன் நாட்டை ஒன்றிணைந்து கட்டியெழுப்புமாறு அரசியல்வாதிகளைக்
கேட்டுள்ளார். லெபனன் நாடு தற்போது கட்டியெழுப்பப்பட வேண்டும், இல்லாவிடில் இந்நாடு
ஒருபோதும் கட்டியெழுப்பப்படாது என்று எச்சரித்துள்ள முதுபெரும் தந்தை Al-Rahi, உலகின்
கிழக்குக்கும் மேற்குக்குமான ஒப்புரவு, உரையாடல் மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியாக லெபனன்
நாடு உள்ளது என்று திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளார். லெபனன்
நாட்டைச் சுற்றியுள்ள பகுதியிலும், பன்னாட்டு அளவிலும் மோதல்களில் ஈடுபடாமல் இருக்குமாறு
லெபனன் அரசியல்வாதிகளைக் கேட்டுள்ள முதுபெரும் தந்தை Al-Rahi, லெபனன், தனது நாட்டையும்,
தனது நாட்டின் எல்லைகளையும் தக்கவைத்துக்கொள்ளக்கூடிய தேசியப் பாதுகாப்புக்கான யுக்திகளை
நடைமுறைப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.