பிப்.07,2014. வாகனங்கள் வெளியிடும் புகையால் ஏற்படும் மாசு, இந்தியாவிலும், சீனாவிலும்
அதிகரித்துள்ளவேளை, இதைக் கட்டுப்படுத்த இவ்விரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்
என, ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான் கேட்டுக்கொண்டார். 150 ஆண்டுகளுக்குமுன்,
வளர்ந்த நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட சேதமே இப்போதைய சுற்றுச்சூழல் பாதிப்புக்கு காரணம்
என்பதால், இப்பாதிப்புக்கு வளர்ந்த நாடுகளே பொறுப்பேற்க வேண்டும் எனவும் கோபி அன்னான்
கூறியதாக ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. மேலும், உலகில் உள்ள 178 நாடுகளில்
சுற்றுச்சூழல் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் சுற்றுச்சூழல் மாசுபாட்டில் இந்தியாவின்
நிலை படுபரிதாபமாக உள்ளது என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லியில் புகை மூலம் சுற்றுச்சூழல்
அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பில் சீனாவின் பெய்ஜிங் நகரை டெல்லி
முந்திச் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.