2014-02-06 16:12:32

அர்ஜண்டீனா தீவிபத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அனுதாபத் தந்தி


பிப்.06,2014. அர்ஜண்டீனா நாட்டில் Buenos Aires மாநகரின் Barracas பகுதியில் இப்புதன் இரவு ஏற்பட்ட தீவிபத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து திருத்தந்தை பிரான்சிஸ் தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
Buenos Aires பேராயர் Aurelio Mario Poli அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரால் இத்தந்தியை, திருப்பீடச் செயலர் பேராயர் Pietro Parolin அவர்கள் அனுப்பியுள்ளார்.
Barracas பகுதியில் வங்கி விவரங்கள் சேகரிக்கும் அலுவலகம் ஒன்றில் ஏற்பட்ட இந்தத் தீயை அணைக்கச் சென்ற தீயணைப்பு வீரர்களும், உதவிகள் செய்யச் சென்றிருந்த தன்னார்வத் தொண்டர்களும் அடங்கிய குழுவின் ஒன்பது பேர் இத்தீவிபத்தில் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
தங்கள் கடமைகளை நிறைவேற்றிய நேரத்தில் இறைவன் தன்னிடம் அழைத்துக் கொண்டவர்களை நாம் நன்றியோடும் பெருமையோடும் எண்ணிப் பார்ப்போம் என்றும், இவர்களின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு நம் ஆதரவை வழங்குவோம் என்றும் திருத்தந்தை தன் அனுதாபத் தந்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.