திருஅவையில் உள்ளார்ந்த மாற்றங்களை கொணர்வது பொதுநிலையினரின் முக்கியப் பணிகளில் ஒன்று
- கர்தினால் Tagle
பிப்.05,2014. நேர்மையின் சான்றுகளாய் வாழ்வதன் மூலம், திருஅவையில் உள்ளார்ந்த மாற்றங்களை
கொணர்வதும், திருஅவையின் மீட்புப்பணியில் பங்கேற்பதும் பொது நிலையினரின் முக்கியப் பணிகள்
என்று பிலிப்பின்ஸ் நாட்டு கர்தினால் Luis Antonio Tagle அவர்கள் கூறினார். அண்மையில்
நடைபெற்ற மணிலா உயர் மறைமாவட்டத்தின் பொதுஅவையில் உரையாற்றிய மணிலா பேராயர் கர்தினால்
Tagle அவர்கள், உள்ளிருந்து ஏற்படும் மாற்றங்களே நிலத்து நிற்கும் என்பதால், அந்த மாற்றங்களைக்
கொணர்வது பொது நிலையினரின் முக்கியப் பணி என்று கூறினார். உலகத்தின் முன்னிலையிலும்,
சமுதாயத்திற்கும் நல்ல எடுத்துக்காட்டுகளாக வாழும் வாய்ப்பு பொது நிலையினருக்கு அதிகாமாக
உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் Tagle அவர்கள், நேர்மை, கண்ணியம் ஆகிய விழுமியங்களோடு
எடுத்துக்காட்டான வாழ்வை மேற்கொள்ள பொது நிலையினர் தயங்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டார். பிலிப்பின்ஸ்
நாட்டில் 30,000 மக்களுக்கு ஓர் அருள் பணியாளர் என்ற நிலை இருப்பதைச் சுட்டிக்காட்டிய
கர்தினால் Tagle அவர்கள், இந்நிலையில், திருஅவையின் பணிகளை முழுமையாக்குவது பொது நிலையினரின்
பங்கு அதிகமாக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.