சூரிய ஒளிமூலம் மின்சக்தியை உருவாக்கி மின்வாரியத்துக்கு விற்பனை செய்யும் விவசாயி
பிப்.05,2014. தமிழ்நாட்டின் விழுப்புரம் அருகே ஒரு விவசாயி தன் வீட்டில் சூரிய ஒளிமூலம்
மின்சாரம் தயாரித்து மின்வாரியத்துக்கு விற்பனை செய்கிறார் என்ற ஆச்சரியமூட்டும் தகவல்
வெளிவந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், ராம்பாக்கம் கிராமத்தில் ‘கரண்ட் விக்கிறவர்’
என்ற அடைமொழிப் பெயருடன் அழைக்கப்படும் சுப்புராயலு அவர்கள், அவரது வீட்டு மொட்டைமாடியில்
சூரிய ஒளி தகடுகளைக் கொண்டு மின்சக்தி உருவாக்கி வருகிறார். மின்தட்டுப்பாட்டால்
அவதிப்பட்ட நேரத்தில்தான் சூரிய ஒளி மூலம் மின்சக்தி உற்பத்தி செய்வது தொடர்பாக அறிந்தேன்.
வீட்டுக்கான மின்சக்தியைத் தயாரிக்க சோலார் நிறுவனங்களை அணுகினேன். அப்போதுதான் “எங்கும்
மின் விளையும்... எம்மனையும் மின் நிலையம்” என்ற திட்டத்தின்மூலம் கடந்த 2013-ம் ஆண்டு
மார்ச் மாதம் 1200 வாட் திறன் கொண்ட கதிர் மின்னாக்கிகளை என் வீட்டு மொட்டைமாடியில் நிறுவினேன்
என்று சுப்புராயலு அவர்கள் கூறினார். இது செயல்படதுவங்கியதும் தன் வீட்டுக்கு 24
மணி நேரமும் மின்சாரம் கிடைத்தது என்றும், பகலில் உற்பத்தியாகும் மின்சக்தியை பேட்டரி
மூலம் சேமித்து இரவில் பயன்படுத்தியதாகவும், உபரி மின்சக்தியை யூனிட் 2 ரூபாய்க்கு மின்வாரியத்துக்கு
விற்பதாகவும் சுப்புராயலு அவர்கள் கூறினார்.