வியட்நாம் கத்தோலிக்கத் திருஅவையின் குதிரை ஆண்டுக் கொண்டாட்டங்கள்
பிப்.01,2014. தூர கிழக்கு நாடுகளில் குதிரை ஆண்டு தொடங்கியுள்ளவேளை, வியட்நாம் கத்தோலிக்கத்
திருஅவை இப்புதிய ஆண்டை மூன்று நாள் செபக் கொண்டாட்டங்களில் செலவழித்து வருகிறது. இப்புதிய
ஆண்டையொட்டி, ஏழைகளோடும், ஓரங்கட்டப்பட்ட மக்களோடும், சிறாரோடும் ஒருமைப்பாட்டுணர்வு
கொள்ளும் பல்வேறு திட்டங்களையும் வியட்நாம் கத்தோலிக்கர் தொடங்கியுள்ளனர். விய்டநாம்
காரித்தாஸ் அமைப்பும், அந்நாட்டின் மேய்ப்புப்பணி அமைப்பின் உதவித் தலைவரும் பல புதிய
முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர். எய்டஸ் நோயாளிகள் மத்தியிலான பணிகளையும் இவர்கள் அதிகரித்துள்ளனர். வியட்நாமின்
8 கோடியே 70 இலட்சம் மக்களில் 48 விழுக்காட்டினர் புத்த மதத்தினர், 7 விழுக்காட்டுக்கு
அதிகமானவர் கத்தோலிக்கர், 5.6 விழுக்காட்டினர் பூர்வீக மதங்களைப் பின்பற்றுகிறவர்கள்
மற்றும் 20 விழுக்காட்டினர் மத நம்பிக்கையற்றவர்கள். சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில்
சனவரி 30ம் தேதி புதிய ஆண்டுக் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. சீனாவில் பாம்பு ஆண்டு
முடிந்து குதிரை ஆண்டு தொடங்கியுள்ளது.