வாழ்வைப் பாதுகாப்பதில் பொதுநிலையினர் முன்னணியில் நின்று செயல்படுமாறு பிலிப்பின்ஸ்
ஆயர் வலியுறுத்தல்
சன.31,2014. மனித வாழ்வு, குடும்பம், திருமணம் ஆகியவற்றின் விழுமியங்களை உறுதியுடன் பாதுகாத்து
மரணக் கலாச்சாரத்தை ஒதுக்கி வாழுமாறு பிலிப்பின்ஸ் மக்களைக் கேட்டுள்ளார் அந்நாட்டு ஆயர்
ஒருவர். பிலிப்பின்சில் மனித வாழ்வுக்கு ஆதரவான மாதம் பிப்ரவரி 2, இஞ்ஞாயிறன்று ஆரம்பிக்கவிருப்பதை
முன்னிட்டு, அந்நாட்டு ஆயர் பேரவையின் குடும்பம் மற்றும் வாழ்வுப் பணிக்குழுத் தலைவர்
ஆயர் Gabriel Reyes வெளியிட்டுள்ள அறிக்கையில், மனித வாழ்வைப் பாதுகாப்பதில் பொதுநிலை
விசுவாசிகள் முன்னணியில் நின்று செயல்படுமாறு வலியுறுத்தியுள்ளார். மனித வாழ்வுக்கு
ஆதரவாகவும், ஏழைகள், நலிந்தோர். அப்பாவிகள் ஆகியோரின் சார்பாகவும் செயல்படுவதற்குப் பொதுநிலையினர்
முன்வருமாறும் ஆயர் Reyes கேட்டுக்கொண்டுள்ளார். பிலிப்பின்சில், பிப்ரவரி 2ம் தேதி,
மனித வாழ்வுக்கு ஆதரவான ஞாயிறாகச் சிறப்பிக்கப்படுகிறது.