திருத்தந்தையர் வழங்கும் செய்திகளை மக்கள் புரிந்துகொள்ளும்படி செய்வது, திருப்பீட
ஊடகப் பணியாளர்களின் முக்கிய வேலை - அருள் பணியாளர் Federico Lombardi
சன.30,2014. திருத்தந்தையர் வழங்கும் செய்திகளை மக்கள் அறியும்படி செய்வது மட்டுமல்ல,
அச்செய்திகளைத் தகுந்த வகையில் மக்கள் புரிந்துகொள்ளும்படி செய்வதும் திருப்பீடத்திற்கென
பணியாற்றும் ஊடகப் பணியாளர்களின் முக்கிய வேலை என்று திருப்பீடப் பேச்சாளர் அருள் பணியாளர்
Federico Lombardi அவர்கள் கூறினார். சனவரி 27, இத்திங்களன்று, இஸ்பெயின் நாட்டின்
Toledo நகரில் நடைபெற்ற ஒரு விழாவில் அருள் பணியாளர் Lombardi அவர்களுக்கு சிறப்பு விருது
ஒன்று வழங்கப்பட்டது. இவ்விருது வழங்கும் விழாவின்போது, "மூன்று திருத்தந்தையர்,
மூன்று தொடர்பாளர்கள் - என் அனுபவங்களும் எண்ணங்களும்" என்ற தலைப்பில் அருள் பணியாளர்
Lombardi அவர்கள் வழங்கிய உரையில், கடந்த 20 ஆண்டுகள், திருத்தந்தையர் 2ம் ஜான்பால்,
16ம் பெனடிக்ட், பிரான்சிஸ் ஆகியோருடன் தான் ஆற்றிய பணிகளைக் குறித்துப் பேசினார். மூன்று
திருத்தந்தையரும், தங்களுக்கே உரிய பாணியில் தொடர்புகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்
என்பதை அருள் பணியாளர் Lombardi அவர்கள் விளக்கினார். தற்போது திருத்தந்தையாகப் பணியாற்றும்
பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகிற்கும் தனக்கும் உள்ள தூரத்தை அனைத்து வழிகளிலும் குறைத்துள்ளார்
என்பதைச் சுட்டிக்காட்டிய அருள் பணியாளர் Lombardi அவர்கள், ஒவ்வொரு திருத்தந்தையும்
தங்கள் உள்ளத்திலிருந்தே பேசி வந்துள்ளனர் என்றும், அவர்களுக்கு ஊடகத் துறையினர் எவ்வகையிலும்
பயிற்சிகள் தருவதில்லை என்றும் விளக்கினார். இஸ்பானிய நாட்டின் Toledo நகரில் இயங்கி
வரும் Radio Santa Maria என்ற வானொலி நிலையத்தின் 20 ஆண்டுகள் பணியையும், மறைமாவட்டத்
தொலைகாட்சி நிலையத்தின் 15 ஆண்டுகள் பணியையும் ஒட்டி, Toledo நகரில் இவ்விழா ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.