2014-01-30 16:11:02

திருத்தந்தையர் 23ம் ஜான், 2ம் ஜான்பால் ஆகியோர் உருவங்கள் பதித்த நினைவு வில்லைகள் - வத்திக்கான் வெளியீடு


சன.30,2014. வருகிற ஏப்ரல் 27ம் தேதி, ஞாயிறன்று திருத்தந்தையர் 23ம் ஜான், மற்றும் 2ம் ஜான்பால் ஆகிய இருவரும் புனிதர்களாக உயர்த்தப்படுவர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ளதையடுத்து, இவ்விருவரின் உருவங்கள் பதித்த நினைவு வில்லைகளை, வருகிற பிப்ரவரி 3ம் தேதியன்று வத்திக்கான் வெளியிட உள்ளது.
புன்னகை நிறைந்த தன் முகத்தாலும், அன்பு நிறைந்த சொற்களாலும் பல கோடி மக்களை கவர்ந்துள்ள, முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை கூட்டி, திருஅவையின் வாழ்வில் புத்துணர்வை உருவாக்கியது, அவரைப் புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்று வத்திக்கான் வெளியிட்ட ஒரு செய்திக் குறிப்பு கூறுகிறது.
அதேபோல், திருஅவையை 21ம் நூற்றாண்டிற்குள் அழைத்துச் சென்றதாலும், உலகின் பல நாடுகளில் பயணங்கள் மேற்கொண்டு, இளையோரை தன் வசம் ஈர்த்த்தாலும், முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், திருஅவையில் மட்டுமல்ல, உலகெங்கும் புத்துணர்வை கொணர்ந்தார் என்றும் வத்திக்கான் அறிக்கை கூறுகிறது.
வெண்கலம், மற்றும் வெள்ளி ஆகிய இரு உலோகங்களில் வெளியிடப்படவிருக்கும் இந்த நினைவு வில்லைகள் Daniela Longo என்ற கலைஞரால் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று, திருப்பீடத்தின் தபால்தலைகள், மற்றும் நாணயங்களை வெளியிடும் அலுவலகம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.