கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதே சிரியாவில் பணியாற்றும் அருள் பணியாளரின் மிக
முக்கியப் பணியாக உள்ளது- கர்தினால் Leornardo Sandri
சன.29,2014. சிறிதும் தளராத உள்ளத்துடன், எதிர்நோக்கையும், நம்பிக்கையையும் திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து இவ்வுலகில் பரப்பிவருகிறார் என்று வத்திக்கான் உயர் அதிகாரி
ஒருவர் கூறினார். கீழை வழிபாட்டு முறை திருப்பீடப் பேராயத்தின் தலைவரான கர்தினால்
Leornardo Sandri அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியொன்றில்,
கத்தோலிக்கத் திருஅவை மத்தியக் கிழக்குப் பகுதியில் கிறிஸ்துவர்களுக்கு ஆற்றும் பணிகள்
பற்றி எடுத்துரைத்தார். மத்தியக் கிழக்குப் பகுதியில், குறிப்பாக, சிரியாவில் வாழும்
கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதே அங்கு பணியாற்றும் அருள் பணியாளர்கள், ஆயர்கள்,
மற்றும் துறவியரின் மிக முக்கியப் பணியாக உள்ளது என்று கர்தினால் Sandri அவர்கள் கூறினார். திருத்தந்தை
ஆறாம் பவுல் அவர்கள், முதுபெரும் தந்தை Athenagoras அவர்களைச் சந்தித்த 50ம் ஆண்டு நிறைவுக்குப்பின்,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதுபெரும் தந்தை Bartholomew அவர்களைச் சந்திக்கவிருப்பது,
கிறிஸ்தவ ஒன்றிப்பினை வளர்க்கும் மற்றொரு மாபெரும் முயற்சியாக அமையும் என்றும் கர்தினால்
Sandri அவர்கள் தன் பேட்டியில் நம்பிக்கை தெரிவித்தார்.