2014-01-28 16:21:56

வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயல்படுவோம், இஸ்லாமபாத் ஆயர்


சன.28,2014. வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எதிரான அரசின் தீவிர முயற்சிகளுக்கு ஆதரவை வழங்குவோம் என, பாகிஸ்தானின் இஸ்லாமபாத் ஆயர் ரூஃபின் அந்தோணி அவர்கள் அந்நாட்டுக் கிறிஸ்தவர்களைக் கேட்டுக்கொண்டார்.
பாகிஸ்தானில் இத்திங்களன்று செப அமைதி நாளைக் கடைப்பிடித்த கிறிஸ்தவ சமூகத்திடம் இவ்வாறு உரையாற்றிய ஆயர் அந்தோணி அவர்கள், பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்பதற்கான அரசு மற்றும் இராணுவத்தின் நடவடிக்கைகளுக்குச் சார்பாகச் செயல்படுவோம் எனக் கூறினார்.
கடந்த காலங்களில் இரத்தம் சிந்தும் தாக்குதல்களைக் கண்டிருக்கிறோம், ஆலயங்களும் பள்ளிகளும் தாக்கப்பட்டுள்ளன, பயங்கரவாத நடவடிக்கைகளில் நம் அன்புக்குரியவர்களை இழந்திருக்கிறோம் என்றுரைத்த ஆயர் அந்தோணி அவர்கள், நமது வருங்காலத் தலைமுறை அச்சமின்றி வாழ்வதற்கு நாட்டில் அமைதி ஏற்படவேண்டுமெனச் செபிப்போம் எனக் கூறினார்.
பாகிஸ்தானில் வன்முறைக்குப் பலியானவர்களையும், போலியோ தடுப்பு மருந்து நடவடிக்கைகளை ஊக்கப்படுத்திய மறைந்த அருள்பணியாளர் Anwar Patras அவர்களையும் நினைவுகூரும் விதமாக, இஸ்லாமபாத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மெழுகுதிரி ஏந்தியவண்ணம் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
பாகிஸ்தானில் இந்த 2014ம் ஆண்டின் முதல் வாரங்களில் நடைபெற்ற பயங்கரவாதச் செயல்களில் பலர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: AsiaNews








All the contents on this site are copyrighted ©.