2014-01-28 16:06:08

புனிதரும் மனிதரே - இலங்கையின் திருத்தூதர்


1651ம் ஆண்டு இந்தியாவின் கோவாவில் பிறந்தவர் ஜோசப் வாஸ் (Joseph Vaz). இயேசுசபையினர் நடத்திவந்த கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து, தன் 25வது வயதில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டு சிறப்பான ஒரு வாக்குறுதியின் வழியாக "மரியாவின் அடிமை" என்று தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.
இவர் அருள்பணியாளராகப் பணியாற்றியபோது, கோவாவில் கத்தோலிக்கத் திருஅவை இரு பிரிவாகப் பிளவுபட்டிருந்தது. இதைக் கண்டு மிகவும் மனம் வருந்திய அருள்பணியாளர் வாஸ் அவர்கள், இந்தப் பிளவினை இணைக்கும் முயற்சிகளில் இறங்கினார். ஓரளவு வெற்றியும் கண்டார். தன் குருத்துவப் பணியால் பேரும் புகழும் அடைந்து வந்த அருள்பணியாளர் வாஸ் அவர்களைக் கண்டு பொறாமையுற்ற சிலர், அவரைக் கொல்லத் தீர்மானித்து, ஒரு மலையுச்சிக்குக் கொண்டுசென்றனர். அங்கு அவரை அக்குழுவினர் தாக்க முற்பட்டபோது, அருள்பணியாளர் வாஸ் அவர்கள், முழந்தாள்படியிட்டு செபிக்க ஆரம்பித்தார். அவர் செபிக்க ஆரம்பித்ததும், அவ்விடத்தில் ஒரு நீரூற்று தோன்றியது. இதைக் கண்ட அக்குழுவினர் பயந்து ஓடிவிட்டனர். இது பாரம்பரியமாகச் சொல்லப்படும் ஒரு நிகழ்ச்சி.
இலங்கையில் பணிசெய்வதற்கு அருள்பணியாளர்கள் இல்லை என்பதைக் கேள்விப்பட்ட அருள்தந்தை வாஸ் அவர்கள், 1687ம் ஆண்டு இலங்கை சென்றடைந்தார். 23 ஆண்டுகள் அயராமல் உழைத்த அருள்தந்தை, தனது 59ம் வயதில் இறையடி சேர்ந்தார். 1995ம் ஆண்டு முத்திபேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், இலங்கையில் மேய்ப்புப்பணிப் பயணம் மேற்கொண்டபோது, இவரை முத்திபேறு பெற்றவராக உயர்த்தினார். ‘இலங்கையின் திருத்தூதர்’ என்று புகழப்படும் முத்திபேறு பெற்ற ஜோசப் வாஸ் அவர்கள், 1711ம் ஆண்டு சனவரி 16ம் நாள் இறையடி சேர்ந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.