2014-01-28 16:21:36

திருத்தந்தை பிரான்சிஸ் : யூத இன அழிப்புக் கொடுஞ்செயல்கள் இனிமேல் ஒருபோதும் நடக்காதிருக்கட்டும்


சன.28,2014. யூத இன அழிப்புக் கொடுஞ்செயல்கள் இனிமேல் ஒருபோதும் நடக்காதிருக்கட்டும், ஏனெனில் அவை மனித சமுதாயத்துக்கு அவமானமாக இருக்கின்றன என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
யூத இன அழிப்புக் கொடுஞ்செயல்களில் இறந்தவர்களை நினைவுகூரும் அனைத்துலக நாளான இத்திங்களன்று யூதமத ராபி Abraham Skorka அவர்களுக்கு, தான் கைப்பட எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.
அர்ஜென்டீனா நாட்டு புவனோஸ் ஐரெஸ் யூத மத ராபியும், தனது நண்பருமான Skorka அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய இக்கடிதம், உரோம் நகரில் இத்திங்கள் மாலை நடைபெற்ற இசைக் கச்சேரியில் வாசிக்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின்போது யூத இன அழிப்புக் கொடூரங்களுக்குப் பின்னர் அவ்விடங்களில் கிடந்த 12 வயலின்களும், cello என்ற மற்றோர் இசைக் கருவியும் இந்த இசைக் கச்சேரியில் முதன்முறையாக இத்திங்களன்று வாசிக்கப்பட்டன. இஸ்ரேல் நாட்டு Luthier Amnon Weinstein என்பவர் இந்தக் கருவிகளைக் கண்டுபிடித்து பழுதுபார்த்து பாதுகாத்து வருகிறார்.
யூத இன அழிப்புக் கொடுஞ்செயல்களில் இறந்தவர்களை நினைவுகூரும் அனைத்துலக நாள் ஆண்டுதோறும் சனவரி 27ம் தேதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாள், 1945ம் ஆண்டில் ஜெர்மன் வதைப்போர் முகாம்களிலிருந்து மக்கள் விடுதலை செய்யப்பட்ட நாளாகும்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.