2014-01-28 16:22:17

கொலம்பியாவில் வன்முறையாளர்கள் நம்பிக்கையைக் கொலை செய்ய விரும்புகின்றனர், Cali பேராயர்


சன.28,2014. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் Caliயில் புனித செசீலியா ஆலயம் அவமரியாதை செய்யப்பட்டு அவ்வாலயத்தில் இருவர் கொலை செய்யப்பட்டிருப்பதற்குத் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் Cali பேராயர் Darío de Jesús Monsalve Mejía.
கொலம்பிய அரசும், ஆயுதம் தாங்கிய வன்முறைக் குழுக்களும் வன்முறைகளைக் கைவிடுமாறு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ள பேராயர் Monsalve Mejía அவர்கள், இக்குழுக்கள் அமைதிக்கான நடவடிக்கைகளில் உடனடியாக இறங்குமாறு கேட்டுள்ளார்.
இவ்வன்முறை குறித்து பீதெஸ் செய்தி நிறுவனத்துக்குத் தகவல் அனுப்பியுள்ள பேராயர் Monsalve Mejía அவர்கள், இக்குழுக்கள் நம்பிக்கையைக் கொலை செய்ய விரும்புகின்றனர் எனக் கவலை தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளியன்று, வன்முறையாளர்கள், புனித செசீலியா ஆலயத்தை அவமரியாதை செய்ததுடன், அவர்கள், திருட முயன்றபோது, அவர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சித்த ஓர் ஆணையும், அவ்வாலயத்தில் செபித்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணையும் கொலை செய்துள்ளனர்.

ஆதாரம்: Fides








All the contents on this site are copyrighted ©.