பிரேசில் நாட்டுச் சிறைகளின் நிலைமைகள் கவலையளிக்கின்றன, ரியோ டி ஜெனெய்ரோ பேராயர்
சன.24,2014. பிரேசில் நாட்டுச் சிறைகள் பேரச்சம் ஏற்படுத்தக்கூடிய நெருக்கடி நிலைகளை
எதிர்நோக்கி வருவதாக, புதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருக்கும் அந்நாட்டின் ரியோ டி
ஜெனெய்ரோ பேராயர் Orani João Tempesta கவலை தெரிவித்தார். அண்மையில் பிரேசில் அரசுத்தலைவர்
Dilma Rousseff அவர்களைச் சந்தித்துப் பேசிய பேராயர் Tempesta, பிரேசில் நாட்டுச் சிறைகளிலுள்ள
கைதிகளுக்கு மறுசீரமைப்புக் கல்வி வழங்கப்படுவதில்லை என்றும், அந்நாட்டின் சிறைகள் கடும்
நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார். பிரேசிலின் Maranhao மாநிலச் சிறைகளில்
கடந்த ஆண்டில் இடம்பெற்ற வன்முறையில் 62 பேர் இறந்தனர். இவ்வாண்டும் இதே மாநிலத்தின்
Pedrinhas சிறையில் ஏற்கனவே 3 பேர் இறந்துள்ளனர். இந்நாட்டில் அதிகமாக வன்முறைகள் இடம்பெறும்
சிறைகளில் Pedrinhas மையம் முக்கியமானது என்று ஊடகங்கள் கூறுகின்றன. அண்மையில் வெளியான
ஓர் அதிகாரப்பூர்வ ஆய்வறிக்கையின்படி, பிரேசில் நாட்டுச் சிறைகளில் 3,06,497 கைதிகளே
இருக்க முடியும். ஆனால் 2011ம் ஆண்டின் இறுதியில் 5,14,582 கைதிகள் இருந்தனர் எனத் தெரியவந்துள்ளது.