திருத்தந்தை பிரான்சிஸ் : நாம் பிறரோடு மனக்கசப்புச் சுவர்களை அல்ல, உரையாடல் பாலங்களை
எப்போதும் கட்டுவோம்
சன.24,2014. நாம் பிறரோடு எப்போதும், குறிப்பாக, காழ்ப்புணர்வு நம்மைப் பிறரிடமிருந்து
பிரிக்கும்போது உரையாடலைக் கட்டியெழுப்புவது எளிதானது அல்ல என்று கூறினார் திருத்தந்தை
பிரான்சிஸ். ஆயினும், கிறிஸ்தவர்கள் தாழ்ச்சியோடும் பணிவோடும், செவிமடுத்தல் மற்றும்
ஒப்புரவின் பாதையை எப்பொழுதும் தேடுகின்றனர், ஏனெனில் இதுவே இயேசு கற்பித்த பாதையாகும்
என, இவ்வெள்ளி காலை வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி
மறையுரையில் கூறினார் திருத்தந்தை. மன்னர் சவுலுக்கும் தாவீதுக்கும் இடையே நடந்த உரையாடல்
பற்றிக் கூறும் இந்நாளின் முதல் வாசகத்தை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ்,
உரையாடல் பாதை சமாதானத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். குடும்பத்தில், குழுக்களில்
பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்படலாம், ஆயினும் அச்சமயங்களில் சுவர்களை எழுப்பாமல், விரைவில்
அமைதியைத் தேடுவது முக்கியமானது என்றும், குரல்களை உயர்த்திப் பேசாமல் சாந்தத்தோடும்
உரையாடல் நடத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை. பெர்லினை பல ஆண்டுகளாகப்
பிரித்து வைத்திருந்த சுவரைப் போல இல்லாமல், நாம் பாலத்தைக் கட்ட வேண்டும், நம் இதயங்களும்
நம்மைப் பிறரிடமிருந்து பிரிக்கும் பெர்லின் சுவர்போல் மாறக்கூடும் என்றுரைத்த திருத்தந்தை
பிரான்சிஸ், புனித பிரான்சிஸ் சலேசியாரின் விழாவாகிய இன்று, இனிமையின் வல்லுனராகிய அவரிடம்
பிறரோடு சுவர்களை அல்ல, பாலங்களைக் கட்டுவதற்கு வரம் கேட்போம் என்றும் மறையுரையில் கூறினார்.