புனிதரும் மனிதரே : தர்மத்தில் தலைசிறந்த புனித யோவான்
புனித யோவான் அலெக்சாந்திரியாவின் முதுபெரும் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளன்று,
அந்நகரில் ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்கள் பற்றிய கணக்கெடுப்பைக் கவனமாக எடுக்குமாறு
அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். அவர்களும் உடனடியாக பணியில் இறங்கி, இந்த மக்கள் அலெக்சாந்திரியாவில்
7,500 பேர் இருப்பதாகக் கூறினர். அவர்கள் அனைவருக்கும் திருஅவைச் சொத்திலிருந்து ஒவ்வொரு
நாளும் உடையும் உணவும் கொடுத்து வந்தார். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையும் வெள்ளிக்கிழமையும்
பேராலய வாயிலின் முன்பாக அமர்ந்துகொண்டு தேவையில் இருக்கும் ஒவ்வொருவரின் குறைகளைக் கேட்டு
நிவர்த்தி செய்தார். பிணக்குகளைத் தீர்த்து வைத்தார். தவறு செய்தவர்கள் திருந்த உதவினார்.
வாரத்தில் மூன்று நாள்கள் நோயாளிகள் வீடுகளைச் சந்தித்து துன்புறுவோருக்குத் தேவையான
உதவிகளைச் செய்தார். ஒருமுறை புனித யோவான் நோயாளிகளைச் சந்தித்துக்கொண்டிருந்தபோது பிச்சைக்கார
மனிதர் ஒருவரைச் சந்தித்தார். அந்த மனிதருக்கு ஆறு வெள்ளி நாணயங்களைக் கொடுக்கச் சொன்னார்.
பின்னர் அந்த மனிதர் தனது உடையை மாற்றிக் கொண்டு மீண்டும் வந்து தர்மம் கேட்டார். புனித
யோவான் மேலும் ஆறு வெள்ளி நாணயங்களை அவருக்குக் கொடுத்தார். அந்த மனிதர் மூன்றாம் முறையும்
வந்து தர்மம் கேட்டபோது புனித யோவானோடு சென்றவர்கள் அந்த மனிதரை விரட்ட முயற்சித்தனர்.
ஆனால் புனித யோவானோ, ஒருவேளை இவர் கிறிஸ்துவாக வந்து என்னைச் சோதிக்கலாம் என்று சொல்லி,
அந்த மனிதருக்கு 12 வெள்ளி நாணயங்களைக் கொடுக்கச் சொன்னார். இன்னொருமுறை கப்பல் சேதத்தால்
துன்புற்ற ஒரு வணிகருக்கு இருமுறை பணம் கொடுத்து உதவினார் புனித யோவான். மூன்றாவது தடவை
திருஅவைக்குச் சொந்தமான கப்பலையும், அது நிறைய தானியங்களையும் நிரப்பிக் கொடுத்து பாதுகாப்பான
பயணத்துக்கு உதவினார் புனிதர். இவ்வாறு பல கருணைச் செயல்களைச் செய்த அலெக்சாந்திரியாவின்
முதுபெரும் தந்தை புனித யோவான் சைப்ரசில் உயர்மதிப்புள்ள குடும்பத்தில் பிறந்தவர். 619ம்
ஆண்டில் தனது 64வது வயதில் சைப்ரசில் இறந்தார் தர்ம வள்ளல் புனித யோவான், கருணைநிறை புனித
யோவான் என இவர் அழைக்கப்படுகிறார்.