2014-01-23 16:01:02

திருத்தந்தையின் Twitter செய்தி - வாஷிங்டன் பேரணியில், என் செபங்கள் வழியாக, நானும் கலந்துகொள்கிறேன்


சன.23,2014. "கிறிஸ்மஸ் காலத்தில் நம் உள்ளத்தில் பிறந்த ஒளியை நாம் பாதுகாத்து வளர்ப்போம்; நம் ஒவ்வொரு நாள் வாழ்விலும், நாம் செல்லும் இடமெல்லாம் இவ்வொளியை ஏந்திச் செல்வோம்" என்ற வார்த்தைகள் அடங்கிய Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒன்பது மொழிகளில் இவ்வியாழனன்று வெளியிட்டார்.
மேலும், சனவரி 22, இப்புதனன்று அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உயிர் காக்கும் பேரணியில் கலந்துகொண்ட பல்லாயிரம் மக்களுக்கென ஆங்கிலம், ஸ்பானியம் ஆகிய இரு மொழிகளில் தன் Twitter செய்தியை வெளியிட்டார் திருத்தந்தை.
"வாஷிங்டன் நகரில் நடைபெறும் பேரணியில் என் செபங்கள் வழியாக நானும் கலந்துகொள்கிறேன். அனைத்து உயிர்களையும், குறிப்பாக, மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ள உயிர்களை மதிப்பதற்கு இறைவன் நமக்கு உதவுவாராக" என்ற வார்த்தைகளை இச்செய்தியில் அளித்தார் திருத்தந்தை.
திருத்தந்தை அவர்கள் ஒவ்வொரு நாளும் வழங்கிவரும் Twitter செய்திகளை, உலகெங்கும் 36 இலட்சம் மக்கள் வாசித்து வருகின்றனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / Zenit








All the contents on this site are copyrighted ©.