திருத்தந்தை பிரான்சிஸ்: அன்றாட வாழ்வில் நமது விசுவாசத்தை வாழ அழைப்பு
சன.21,2014. நம் அன்றாட வாழ்வில் நமது கிறிஸ்தவ விசுவாசத்தை வாழ்ந்தால், நம் வேலையும்
நாம் கிறிஸ்தவராய் இருப்பதன் மகிழ்வைப் பரப்புவதற்கு ஒரு வாய்ப்பாக மாறும் என, இச்செவ்வாய்
Twitter செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், புனித ஆக்னஸ் விழாவை
முன்னிட்டு இச்செவ்வாய் பகல் 12.30 மணிக்கு வத்திக்கான் புனித மார்த்தா இல்லத்தில் இரண்டு
செம்மறி ஆடுகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் கொடுக்கப்பட்டன. இந்த ஆடுகளிலிருந்து
எடுக்கப்படும் உரோமங்களினால், பேராயர்கள் அணியும் பால்யம் என்ற கழுத்துப்பட்டைத் தயாரிக்கப்படுகின்றது.
இந்தப் பால்யங்கள், வத்திக்கான் பசிலிக்காவில் புனித பேதுரு கல்லறைப் பீடத்தில் ஒரு
சிறிய பெட்டியில் வைக்கப்படுகின்றன. ஜூன் 29ம் தேதி தூயவர்கள் பேதுரு பவுல் விழாவன்று
இப்பெட்டியிலுள்ள பால்யங்களைப் புதிய பேராயர்களுக்குத் திருத்தந்தையர் கொடுப்பது வழக்கமாக
இருந்து வருகிறது.