சன.20,2014. மூவேளை செப உரையின் இறுதியில், இஞ்ஞாயிறன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட
உலக குடியேற்றதாரர், புலம்பெயர்ந்தோர் நாளையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள், தங்கள் சொந்த நாட்டைவிட்டு வேறு நாடுகளில் வாழும்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள
குடியேற்றதாரரும், புலம்பெயர்ந்தோரும், வருங்காலத்தில் நம்பிக்கை இழக்காமல் செயல்படவேண்டும்
என அழைப்பு விடுத்தார். போதிய ஆவணங்களின்மை, வேலையின்மை போன்றவற்றால் புலம்பெயர்ந்தோர்
அனுபவிக்கும் துன்பங்களை நினைவுகூர்வோம் என்று தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களிடம்
எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்பமானச் சூழல்களில் வாழும் குடியேற்றதாரர்,
மற்றும் புலம்பெயர்ந்தோர்களுக்காக செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார். புலம்பெயர்ந்தோரிடையே
சிறப்புப் பணியாற்றிவரும் Scalabrini துறவுசபையின் பணிகளுக்காக, தனிப்பட்டமுறையில் அவர்களைப்
பாராட்டுவதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.