திருப்பீடப்பேச்சாளருக்கு 2013ம் ஆண்டின் Bravo விருது
சன.20,2014. பிப்ரவரி மாதம் 3ம் தேதி 5ம் தேதிவரை இஸ்பெயினின் மத்ரித்தில் இஸ்பானிய ஆயர்களால்
ஏற்பாடுச்செய்யப்பட்டுள்ள சமூகத்தொடர்பாளர்கள் கருத்தரங்கில் திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வப்பேச்சாளரும்
இயேசுசபை அருள் பணியாளருமான ஃபெதரிக்கோ லொம்பார்தி அவர்களுக்கு விருது ஒன்று வழங்கப்படவுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டிற்கான Bravo விருது இக்கருத்தரங்கின் இறுதியில்
திருப்பீடப்பேச்சாளருக்கு வழங்கப்படும் எனவும், இக்கருத்தரங்கில் அவரும் உரையாற்ற உள்ளார்
எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மறைமாவட்ட சமூகத்தொடர்புப்பணியாளர்கள், தங்கள் அனுபவங்களை
ஒருவர் ஒருவருடன் பகிர்ந்துகொள்ளவும், பொதுத்திட்டங்களில் ஒத்துழைப்பு வழங்கவும் உதவும்
நோக்கில் இஸ்பானிய ஆயர்களால் ஏற்பாடுச்செய்யப்பட்டுள்ள இக்கருத்தரங்கு, மறைமாவட்ட அதிகாரப்பூர்வப்பேச்சாளர்களின்
முக்கியத்துவத்தையும் வலியுறுத்த உள்ளது. அதன் ஒரு பகுதியாக, திருப்பீடப்பேச்சாளர், இயேசுசபை
அருட்தந்தை லொம்பார்தி விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.