கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் : “கிறிஸ்து இப்படிப் பிளவுபட்டுள்ளாரா?”
சன.18,2014. “கிறிஸ்து இப்படிப் பிளவுபட்டுள்ளாரா?”(1கொரி.1,13) என்ற மையக் கருத்துடன்
உலகக் கத்தோலிக்கத் திருஅவையும், பல பிரிந்த கிறிஸ்தவ சபைகளும் இச்சனிக்கிழமையன்று கிறிஸ்தவ
ஒன்றிப்பு வார நிகழ்வுகளைத் தொடங்கியுள்ளன. பல கிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கைகள், கருத்தரங்குகள்,
திருவழிபாடுகள் ஆகியவற்றால் உரோமையில் சிறப்பிக்கப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம், உரோம்
புனித பவுல் பசிலிக்காவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிற கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளுடன்
இம்மாதம் 25ம் தேதி நடத்தும் திருவழிபாட்டுடன் நிறைவடையும். மேலும், கிறிஸ்தவ ஒன்றிப்பு
வாரம் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த கர்தினால் Kurt Koch அவர்கள்,
Constantinople கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் Athenagoras அவர்களும்,
திருத்தந்தை 6ம் பவுல் அவர்களும் எருசலேமில் முதன்முறையாகச் சந்தித்ததன் 50ம் ஆண்டைக்
கொண்டாடுவது, இந்த 2014ம் ஆண்டின் கிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கைகளில் முக்கியமானதாக இருக்கும்
என்று கூறினார். கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் ஆண்டுதோறும் சனவரி 18 முதல் 25 வரை சிறப்பிக்கப்படுகின்றது.