2014-01-16 16:07:58

திருத்தந்தை பிரான்சிஸ் : திருத்தந்தையின் இல்லத்திற்குத் தலைவராக இருப்பவர் கிறிஸ்துவே


சன.16,2014. திருத்தந்தையின் இல்லத்திற்குத் தலைவராக இருப்பவர் ஆண்டவர் கிறிஸ்துவே, அவருக்குச் சீடர்களாகவும், ஊழியர்களாகவும் இருக்கவே நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
திருத்தந்தையின் இல்லத்திற்கு வரும் அனைவரையும் வரவேற்பதிலும், அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதிலும் ஈடுபட்டுள்ள பணியாளர்களையும், அவர்கள் குடும்பத்தினரையும் இவ்வியாழன் நண்பகல் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த அனைவருக்கும் தன் சிறப்பான புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறினார்.
இப்புதனன்று திருப்பலியில் வாசிக்கப்பட்ட முதல் வாசகத்தில், இறைவனின் குரலைக் கேட்பதற்குப் பழகிய இறைவாக்கினர் சாமுவேலைக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, திருத்தந்தையின் இல்லத்திலும் இறைவனின் குரலைக் கேட்பதற்கும், அதற்கு இயைந்து நடப்பதற்கும் நாம் அனைவரும் பழக வேண்டும் என்று எடுத்துரைத்தார்.
திருத்தந்தையின் இல்லப் பணியாளர்கள் என்ற குழுவினர் 1592ம் ஆண்டு திருத்தந்தை 8ம் Clement அவர்களின் காலத்தில் உருவாகியிருந்தாலும், திருத்தந்தை 6ம் பவுல் அவர்களே, அவர்களுக்கு அதிகாரப்பூர்வமான ஒரு நிலையை, 1968ம் ஆண்டில் உருவாக்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.