நன்னெறி வழி கல்விப் புகட்டப்படுவதால் மட்டுமே 'ஊழல்' பிரச்சனையிலிருந்து இந்தியா விடுதலை
பெறும் - தலாய் லாமா
சன.10,2014. ‘கட்டாய மதமாற்றம்’ என்பது, தன்னிலேயே முரணான இரு வார்த்தைகளை இணைக்கும்
ஒரு முயற்சி என்று புகழ்பெற்ற மதத் தலைவர் தலாய் லாமா அவர்கள் கூறினார். இந்தியாவில்,
கிறிஸ்துவர்கள் அடிக்கடி வன்முறைக்கு உள்ளான கர்நாடகா மாநிலத்தில், அண்மையில் நடைபெற்ற
ஒரு பள்ளிவிழாவில் உரையாற்றிய தலாய் லாமா அவர்கள், மதமாற்றம் என்பது ஒருவர் தானாகவே விருப்பப்பட்டு
மேற்கொள்ளும் ஒரு முயற்சி என்பதால், அதில் கட்டாயம் என்ற கருத்துக்கே இடமில்லை என்பதைச்
சுட்டிக்காட்டினார். கல்வி, மருத்துவம் என்ற இரு துறைகளிலும் கிறிஸ்தவர்கள் ஒப்பற்ற
பணியாற்றிவருகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டிய தலாய் லாமா அவர்கள், மக்களை மதமாற்றம்
செய்வதற்கென்று இப்பணிகளைச் செய்தால், அது தவறான ஒரு வழி என்பதையும் எடுத்துரைத்தார். இந்தியா
தற்போது சந்தித்துவரும் ஒரு முக்கிய பிரச்சனை 'ஊழல்' என்பதைச் சுட்டிக்காட்டிய தலாய்
லாமா அவர்கள், நன்னெறி கோட்பாடுகளின் அடிப்படையில் கல்விப் புகட்டப்படுவதால் மட்டுமே
இந்தப் பிரச்சனையிலிருந்து நாடு விடுதலை பெறும் என்பதையும் கூறினார்.