இலங்கை உள்நாட்டுப் போர் குறித்து பன்னாட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும், மன்னார்
ஆயர்
சன.09,2014. இலங்கை உள்நாட்டுப் போர் குறித்து இலங்கை அரசால் நடத்தப்படும் ஆய்வு, மக்கள்
மனதில் நம்பிக்கையைத் தராது என்றும், எனவே, பன்னாட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் கூறினார். பாகுபாடற்ற, நடுநிலையான இத்தகைய ஓர்
ஆய்வே மக்கள் மத்தியில் மீண்டும் ஒப்புரவை வளர்க்கும் வழியாக அமையும் என்றும் ஆயர் இராயப்பு
ஜோசப் அவர்கள் UCAN செய்தியிடம் வலியுறுத்திக் கூறினார். இலங்கைத் தமிழர்களுக்கு நடந்துள்ள
கொடுமைகள் அரசியல் என்ற குறுகிய கண்ணோட்டத்திற்கும் மேற்பட்ட ஓர் மனிதாபிமான, ஆன்மீக
ஆய்வாக மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை ஆயர் இராயப்பு ஜோசப் தன் வேண்டுகோளாக முன்வைத்தார். சிறுபான்மை
வெள்ளை இனத்தவர், பெரும்பான்மை கறுப்பினத்தவரை அடக்கி ஆண்ட தென் ஆப்ரிக்கா நாட்டில் நிகழ்ந்த
ஒப்புரவு, இலங்கைக்கு ஒரு பாடமாக அமைந்து, பெரும்பான்மை சிங்கள மக்கள், சிறுபான்மை தமிழர்களுடன்
இணைந்து வாழும் வழிகளைச் சொல்லித்தர முடியும் என்றும் மன்னார் ஆயர் எடுத்துரைத்தார்.