திருத்தந்தை பிரான்சிஸ் - சமுதாயத்தில் ஈடுபாடு கோள்வது, அடித்தள கிறிஸ்தவ குழுமங்களுக்கு
விடுக்கப்பட்டுள்ள சிறப்பான அழைப்பு
சன.08,2014. நற்செய்தியைப் பறைசாற்றுவதும், நற்செய்தியின் மகிழ்வை ஒவ்வொரு மனிதருக்கும்
கொணர்வதும் திருஅவை முழுமைக்கும், இறைமக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள பணி என்று
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார். சனவரி 7, இச்செவ்வாய் முதல், சனவரி 11,
இச்சனிக்கிழமை முடிய பிரேசில் நாட்டின் அடித்தள கிறிஸ்துவ குழுமங்கள் இணைந்து Juazeiro
do Norte என்ற நகரில் நடத்தும் கருத்தரங்கிற்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில்
இவ்வாறு கூறியுள்ளார். "இறைவாக்குரைப்பதும், நீதியும் வாழ்வின் பணி" என்ற மையக்கருத்தில்
கூடியுள்ள உங்கள் அனைவரையும் வாழ்த்துவதில் நான் மகிழ்கிறேன் என்று தன் செய்தியைத் துவக்கியத்
திருத்தந்தை, நற்செய்தியின் சார்பில் சமுதாயத்தில் ஈடுபாடு கோள்வது, அடித்தள கிறிஸ்தவ
குழுமங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிறப்பான அழைப்பு என்று குறிப்பிட்டுள்ளார். பிரேசில்
நாட்டில் உள்ள 272 மறைமாவட்டங்களில் செயல்படும் 1 இலட்சத்திற்கும் அதிகமான அடித்தள கிறிஸ்தவ
குழுமங்களின் 4000த்திற்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் இந்த 13வது தேசியக்
கருத்தரங்கு, சனவரி 11, இச்சனிக்கிழமையன்று நிறைவடையும்.