சன.06,2014. மதங்களிடையே பேச்சுவார்த்தைகளைப் பலப்படுத்துவதில் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் ஆர்வம் கொண்டுள்ளதாகவும், அவரின் எளிமையான அணுகுமுறை, இது குறித்த நம்பிக்கைகளை
பிறப்பித்துள்ளதாகவும் அறிவித்தார் கர்தினால் Jean Louis Tauran. மதங்களிடையே உரையாடல்
பணியில் ஈடுபட்டுள்ள திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் தவ்ரான் அவர்கள், "L’Osservatore
Romano" என்ற திருப்பீடச்சார்பு இதழுக்கு வழங்கிய நேர்முகத்தில் இவ்வாறு உரைத்தார். முந்தையத்
திருத்தந்தையர்களின் பாதையில் நடக்கவிரும்பும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து
மதங்களுடனும் நல்லுறவைப்பேண முயல்வதுடன், அனைத்து மதங்களும் மதிக்கப்படவும் ஊக்கமளித்து
வருகிறார் என்று கர்தினால் தவ்ரான் அவர்கள் கூறினார். மதங்களிடையே உரையாடலை ஊக்குவிப்பது
என்பது, கிறிஸ்தவ விசுவாசத்தையோ ஒழுக்க வழிமுறைகளையோ விட்டுக்கொடுப்பது என்று அர்த்தம்
கொள்ளக்கூடாது என்ற கர்தினால் தவ்ரான் அவர்கள், நாம் எதையும் எவர் மீதும் திணிப்பதில்லை,
மாறாக வாழ்வுமூலம் மகிழ்வுநிறை எடுத்துக்காட்டுக்களாக உள்ளோம் என மேலும் கூறினார்.