இந்தோனேசிய அடையாள அட்டைகளில் ஒருவரின் மதச்சார்பு குறிக்கப்படுவதற்கு எதிர்ப்பு
சன.06,2014. இந்தோனேசியாவில் குடிமக்களின் அடையாள அட்டைகளில் அவர்கள் சார்ந்திருக்கும்
மதங்களின் பெயர்கள் குறிக்கப்படுவது நீக்கப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டின்
கிறிஸ்தவ அரசியல்வாதி ஒருவர். ஜகார்த்தா மாவட்டத்தின் துணை ஆளுனர் Basuki Tjahaja
Purnama அவர்கள், மத்திய அரசுக்கு விடுத்துள்ள அழைப்பில், மத சகிப்புத்தன்மை இருப்பது
உண்மையெனில், பாகுபாட்டுடன் நடத்தப்படுவதற்கு வழிவகுக்கும் இந்தப் பழையச் சட்டம் அகற்றப்படவேண்டும்
எனக்கூறியுள்ளார். இஸ்லாம், கிறிஸ்தவம், கத்தோலிக்கம், இந்து, புத்தம் அல்லது கன்பூசியனிசம்
என்ற மதங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டவைகளாக இருக்கும் நிலையில், இந்தோனேசியாவின் 17,000
தீவுகளில் வாழும் மக்களுள் பலர் பாரம்பரிய மதங்களைப் பின்பற்றி வந்தாலும், அவர்கள் இஸ்லாமியர்கள்
என்றே அடையாள அட்டைகளில் குறிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.