2014ல் சகோதரத்துவமும் அமைதியும் திளைக்க மியான்மார் பேராயர் அழைப்பு
சன.06,2014. இந்தப் புத்தாண்டின் துவக்கத்தில் அமைதியும், சகோதரத்துவமும் சனநாயகமும்
மியான்மார் அனைத்து மக்களின் நம்பிக்கையாக இருக்கும் வேளை, விடுதலையும் அமைதியும் நீதியும்
நிறைந்த ஒரு புதிய காலத்தைத் துவக்க மியான்மார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது என்றார் அந்நாட்டு
பேராயர் Charles Maung Bo. கடந்த ஈராண்டுகளில் மியான்மார் நாடு கண்டுள்ள பலவித முன்னேற்றங்களையும்,
அது உலகிற்குத் தன்னைத் திறந்துள்ளதையும் குறித்து எடுத்துரைத்த யாங்கூன் பேராயர் போ,
இன்னும் பல அரசியல் கைதிகள் சிறையில் வாடுவது, பேச்சுவார்த்தைகள் நடைபெறும்போதே பொதுமக்கள்
இரானுவத்தால் தாக்கப்படுவது, பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் வன்முறைகளும் சண்டைகளும்
ஊக்குவிக்கப்படுவது போன்றவை குறித்த வருத்தத்தையும் வெளியிட்டுள்ளார். குடியரசு சீர்திருத்தங்கள்
என்பவை போர்நிறுத்தத்திற்கு உறுதியளிக்கவில்லை என்ற எச்சரிக்கையையும் விடுத்தார் பேராயர். மியான்மார்
சிறுபான்மை சமூகங்களிடையே அமைதியைக் கொணரும் பேச்சுவார்த்தைகளை உள்ளடக்கியதாக தொடரப்படும்
முயற்சிகளே உண்மையான அமைதியைக் கொணரும் என மேலும் எடுத்துரைத்தர் யாங்கூன் பேராயர் போ.