2013ல் உலகில் 22 திருஅவைப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்
சன.04,2014. 2013ம் ஆண்டில் இந்தியா உட்பட உலகில் 22 திருஅவைப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்
என ஃபீதெஸ் செய்தி நிறுவனம் கூறியது. 2012ம் ஆண்டில் 13 மேய்ப்புப்பணியாளர்கள் வன்முறை
இறப்புகளை எதிர்கொண்டவேளை, 2013ம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை ஏறக்குறைய இரு மடங்காகியுள்ளது
எனவும் அச்செய்தி நிறுவனம் கூறியது. இலத்தீன் அமெரிக்காவில் மறைப்பணியாளர்கள் கொலைசெய்யப்படுவது
5வது ஆண்டாக அதிகமான எண்ணிக்கையைக் கொண்டுள்ளது எனவும், 2013ம் ஆண்டில் கொலைசெய்யப்பட்டுள்ள
19 அருள்பணியாளர்களில் 15 பேர் இலத்தீன் அமெரிக்கர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,
இந்தியா, சிரியா, இத்தாலி, டான்சானியா, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகளில் அருள்பணியாளர்களும்,
மடகாஸ்கரில் ஓர் அருள்சகோதரியும், நைஜீரியா மற்றும் பிலிப்பீன்சில் பொதுநிலை திருஅவைப்
பணியாளர்களும் கொலைசெய்யப்பட்டுள்ளனர்.